கரடு முரடான மலைப்பாதை.. இரண்டு மணி நேரம் பயணம்.. பாபாஜி குகையில் தியானம் செய்த ரஜினிகாந்த்!
சென்னை: ரஜினிகாந்த் இமயமலையில் இருக்கும் நிலையில் பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்துள்ளார். அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
ரஜினிகாந்த், 2019ஆம் ஆண்டு அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இமயமலைக்கு சென்றிருந்தார். அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த ரஜினிகாந்த், ஜெயிலர் படத்தை முடித்துவிட்டு தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார்.

அண்ணாத்த: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ந் தேதி வெளியாகி சக்கைப்போடுபோட்டு வருகிறது. படத்தை ரசிகர்கள் திரையரங்கில் திருவிழாப்போல கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் நடித்த சில படங்கள் சரியாக போகாததால், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்றும், அவர் தான் நம்பர் ஒன்று என்கிற பேச்சு சோஷியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது.

பட்டம் தொல்லை தான்: இவை அனைத்திற்கும் ரஜினிகாந்த், ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் சரியான பதிலடி கொடுத்தார். அதில், சூப்பர் ஸ்டார் பட்டம் என்றாலே தொல்லை தான், நான் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என்று தான் சொன்னேன். அதற்கு காரணம் பயமில்லை. நான் கடவுள் ஒருவருக்குத்தான் பயப்படுவேன் என்று பேசி இருந்தார்.
வசூலை அள்ளும் ஜெயிலர்: அதே போல காக்கா கழுகு கதைசொல்லி விஜய்யை மறைமுகமாக தாக்கி விட்டார் என்றெல்லாம் செய்திகள் இணையத்தில் பரவிய நிலையில், ஜெயிலர் திரைப்படம் வெளியாகி கொல மாஸ் காட்டி வருகிறது. படம் வெளியான 6 நாட்களில் 400 கோடியை எட்டி விட்டதாக கூறப்படுகிறது. ஜெயிலர் திரைப்படம் விரைவில் விக்ரம் வசூலை முறியடிக்கும் என்று சொல்லப்படுகிறது.
ரஜினி ஆன்மீக பயணம்: இந்நிலையில், ஆன்மீகப் பயணமாக இமயமலை சென்றுள்ள ரஜினியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி அவர்களுடைய சமாதியில் சென்று வணங்கி அங்கிருந்து தனது பயணத்தை துவங்கிய ரஜினி முன்னதாக பத்ரிநாத் கோயிலுக்கு சென்றார். அங்கு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
பாபாஜி குகை: தற்பொழுது ரஜினிகாந்த் மகா அவதார் பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்துள்ளார். கரடு முரடான மலைப்பாதையில் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடந்து பாபாஜி குகைக்கு சென்ற ரஜினி அங்கு தியானம் செய்துள்ளார். ஜெயிலர் படம் வெளியாவதற்கு முன் ரஜினி ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பி கையெழுத்திட்டுள்ள படத்தின் வேலையை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











