Nelson: உங்களுடன் பணிபுரிந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்.. மாரிமுத்து இறப்பிற்கு நெல்சன் இரங்கல்
சென்னை: நடிகர் மாரிமுத்து இன்றைய தினம் எதிர்நீச்சல் சீரியலுக்கான டப்பிங் வேலையில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
அவரது இழப்பு தமிழ் சினிமா மற்றும் சீரியலில் ஈடு செய்ய முடியாதது என்று எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வம் கண்ணீருடன் அஞ்சலி தெரிவித்துள்ளார்.
மாரிமுத்துவின் உடலருகே எதிர்நீச்சல் சீரியல் டீம் அனைவரும் கதறி அழுததை பார்க்க முடிந்தது.

மாரிமுத்து உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த நெல்சன் திலீப்குமார்: நடிகர் மாரிமுத்து கவிஞர் வைரமுத்துவின் உதவியாளராக தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கியவர். தொடர்ந்து ராஜ்கிரணின் அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் உதவி இயக்குநராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தவர் மாரிமுத்து. பிரசன்னாவின் கண்ணும் கண்ணும், விமலின் புலிவால் போன்ற படங்களை இயக்கியுள்ள மாரிமுத்து, அஜித், விஜய், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
வாலி, உதயா, பரியேறும் பெருமாள், ஜெயிலர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மாரிமுத்து தற்போது தயாரிப்பில் உள்ள கமலின் இந்தியன் 2 படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். ராஜ்கிரணை தொடர்ந்து மணிரத்னம், எஸ்ஜே சூர்யா, சீமான், வசந்த் போன்ற முன்னணி இயக்குநர்களுடனும் உதவி இயக்குநராக புணிபுரிந்து தன்னை மெருகேற்றிக் கொண்ட மாரிமுத்து தொடர்ந்து இயக்குநராகவும் நடிகராகவும் தன்னை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தினார்.
இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக சன்டிவில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர், மாரிமுத்துவின் ஒரிஜினல் பெயரை மறக்க வைத்து குணசேகரனாகவே ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்தத் தொடரில் இவரின் குணசேகரன் கேரக்டர் வில்லனாக இருந்தபோதிலும் ரசிகர்களை கவர்ந்த வில்லனாக அந்த கேரக்டரை மெருகேற்றினார் மாரிமுத்து. இவருக்காகவே இந்தத் தொடரை பார்த்தவர்கள் ஏராளம்.
இந்தக் கேரக்டர் அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொண்டுள்ள நிலையில் தற்போது மாரிமுத்துவின் இழப்பு, அந்த கேரக்டரை எப்படி கொண்டுச் செல்லும் என்ற திகைப்பையும் ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவிற்கு குணசேகரன் என்பவரை தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சீரியல் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திய மாரிமுத்து, சினிமாவிலும் தொடர்ந்து சிறப்பான கேரக்டர்களில் நடித்து வந்தார்.
சமீபத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் மாரிமுத்து. இந்தப்படத்தில் கேரக்டர் தேர்வுகளை சிறப்பாக செய்திருந்தார் நெல்சன் திலீப்குமார். அந்த வகையில் மாரிமுத்துவின் கேரக்டரும் வில்லன் கேங்கில் மிகச்சிறப்பாக அமைந்தது. ரஜினிகாந்துடன் அதிகமான காம்பினேஷன் காட்சிகளில் நடித்திருந்த மாரிமுத்துவிற்கு இந்தப் பாராட்டுக்களை பெற்றுத் தந்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார், மாரிமுத்து இழப்பிற்கு தன்னுடைய இரங்கலை சமூக வலைதளம் மூலமாக பகிர்ந்துள்ளார். மாரிமுத்து மரணத்திற்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து சன் பிக்சர்ஸ் நிறுவனமும் பதிவிட்டுள்ள நிலையில், அதில் பேசியுள்ள நெல்சன், மாரிமுத்து உயிரிழந்ததை கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாகவும் அவருயை ஆத்மா சாந்தியடையவும் பிரார்த்தனை மேற்கொண்டுள்ளார். மேலும் அவருடன் இணைந்து பணியாற்றிய நாட்களை நினைத்து பார்க்கதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











