Jailer: “பெத்த புள்ளைய கொலை பண்ணது நியாயமா தலைவரே..?” ஜெயிலர் லாஜிக் பரிதாபங்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் கடந்த வாரம் வெளியானது.
இந்தப் படம் முதல் வாரத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ரஜினியின் ஃபேன்பாய் சம்பவமாக உருவாகியுள்ள ஜெயிலருக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
அதேநேரம் இந்தப் படத்தில் உள்ள லாஜிக் பரிதாபங்களை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஜெயிலர் லாஜிக் பரிதாபங்கள்: அண்ணாத்த படத்துக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் ரஜினி படம் என்பதோடு, அவரது கம்பேக் எப்படி இருக்கும் என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜெயிலராக வேலை பார்த்து ஓய்வுபெற்ற ரஜினி, தனது மனைவி, மகன், பேரனுடன் ரிட்டையர்ட்மெண்ட் வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். ஒருகட்டத்தில் தனது மகன் கொலை செய்யப்படுவதாக ரஜினிக்கு தெரியவர, அதற்கு காரணமான வில்லன்களை விரட்டி விரட்டி போட்டுத் தள்ளுகிறார். ஆனால், கடைசியில் அவரது மகன் தான் வில்லன் எனத் தெரியவரும் போது என்ன முடிவு எடுக்கிறார் என்பது தான் ஜெயிலர் படத்தின் ஒன்லைன்.
முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரசிகர்களுக்காக இறங்கி அடித்துள்ளார் ரஜினி. கமர்சியலாக இந்தப் படத்தை ஃபேன் பாய் சம்பவம் என சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இப்படத்தில் இருக்கும் லாஜிக் பரிதாபங்களை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். முக்கியமாக ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து சம்பவங்களாக செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் போட்டுள்ள ஒரு ட்வீட் பயங்கர வைரலாகி வருகிறது.

அதாவது ஜெயிலராக வேலை பார்த்த போது சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் ரஜினிக்கு தோஸ்த்தாகின்றனர். அவர்களில் ஜாக்கி ஷெராஃப்க்கு சிறைக்குள்ளே பீடி போன்ற போதை வஸ்துகளை சப்ளை செய்யும் ரஜினி, இறுதியில் பணத்துக்காக ஆசைப்பட்ட தனது மகனை கொலை செய்துவிடுகிறார். இதனை சுட்டிக் காட்டியுள்ள நெட்டிசன்கள், "இதெல்லாம் நியாயமா தலைவரே" என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், "கதைப்படி நேர்மையான அதிகாரியான முத்துவேல் பாண்டியன் ஜெயிலராக இருக்கும்போது கெட்ட தாதாக்களை நல்ல தாதா-வாக மாற்றுகிறார். தாதாவில் ஏது நல்ல தாதா? மோகன்லால் மட்டும் ஏன் தொடர்ந்து கடத்தல் செய்கிறார், ஏன் கொலைகள் செய்கிறார்? ஏன் அவர் மட்டும் நல்ல தாதாவாக மாறவில்லை?" என கேள்விக் கேட்டு ஜெயிலர் லாஜிக் பரிதாபங்கள் என கலாய்த்து வருகின்றனர். அதேநேரம் இந்த ட்ரோல்களை கடந்து ஜெயிலர் 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததாகவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











