Jailer: விக்ரம் பட ஸ்டைலில் ஜெயிலர்... மகனுக்காக வில்லனிடம் மோதும் ரஜினி... இதுதான் கதையா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி - இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், நாளை ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இதனிடையே ஜெயிலர் படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இணையத்தில் லீக்கான ஜெயிலர் பட கதை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. டாக்டர், பீஸ்ட்டை தொடர்ந்து நெல்சன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரஜினியுடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவ ராஜ்குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசையில் ஏற்கனவே ஜெயிலர் படத்தில் இருந்து 3 பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை மாலை ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் கதை குறித்த தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காரணம் ஜெயிலர் கதையும் கமலின் விக்ரம் ஸ்டோரியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது விக்ரம் படத்தில் போலீஸ் ஆபிஸரான தனது மகனை வில்லன்கள் கொலை செய்துவிடுவார்கள். அதற்காக அவர்களை தனது நண்பர்களுடன் சேர்ந்து பலிக்குப் பலி வாங்குவார் கமல். ஸ்பை த்ரில்லர் ஜானரில் இந்தப் படம் உருவாகியிருந்தது. இந்நிலையில், ரஜினியின் ஜெயிலரும் கமலின் விக்ரம் படத்தின் கதையை அப்படியே காப்பி அடித்துள்ளதாக தெரிகிறது.
முத்துவேல் பாண்டியனான ரஜினி தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவரது மகனான அர்ஜுன் காவல்துறையில் நேர்மையான போலீஸ் ஆபிஸராக வேலை பார்த்து வர, அவரது மகனை, அதாவது தனது பேரனை வீட்டில் இருந்து கவனித்துக்கொள்கிறாராம் ரஜினி. அப்போது வில்லன்களுடன் அர்ஜுனுக்கு மோதல் ஏற்பட, அவரை கடத்திச் செல்கின்றனர். இதனால் தனது மகனைத் தேடிப் போகும் ரஜினிக்கு வில்லன் மரவர்மன் ஒரு டாஸ்க் கொடுக்கிறார்.

அதன்படி வில்லன் கொடுத்த டாஸ்க்கை ரஜினிகாந்த் முடித்துவிட்டால், அவரது மகன் அர்ஜுனை உயிரோடு விடுவதாக மிரட்டப்படுகிறார். இதனால் ரிட்டையர்டு ஆன தனது பழைய நண்பர்கள் துணையுடன் மகனை மீட்பதும், வில்லன்களை அழிப்பதும் தான் ரஜினியின் ஜெயிலர் கதை என லீக்காகியுள்ளது. சென்சாருக்கு அனுப்பட்ட போது ஜெயிலர் கதை குறித்த தகவல்கள் லீக்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டாக்டர், பீஸ்ட் படங்களைப் போலவே ஜெயிலரிலும் கடத்தல் சம்பவத்தை வைத்து கதை சொல்லியிருக்கிறாராம் நெல்சன். அதாவது பரவாயில்லை அப்படியே விக்ரம் படத்தின் இன்னொரு வெர்ஷனாக இருக்கிறது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இதனால் தான் விக்ரம் படம் வெளியான பின்னர் ஜெயிலரில் நடிக்க ரஜினி தயங்கினாரா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். சென்சாரில் U/A சர்டிபிகேட் வாங்கியுள்ள ஜெயிலர், 2 மணி நேரம் 48 நிமிடங்கள் ஓடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











