Jailer Success: ஜெயிலர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய ரஜினி... ஏமாற்றத்துடன் திரும்பிய நெல்சன்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் வெளியாகும் முன்னரே இமயமலை சென்றுவிட்ட ரஜினி, இருதினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.
அதேவேகத்தில் ஜெயிலர் படக்குழுவினருடன் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய ரஜினியின் போட்டோஸ் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் சக்சஸ் பார்ட்டியில் ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில வருடங்களாகவே சரியான ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வந்தார். பேட்ட, தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்து வெளியான மூன்று படங்களுமே ரஜினியின் மார்க்கெட்டையே காலி செய்தது. முதல் நாள் ஓபனிங் தவிர பாக்ஸ் ஆபிஸில் கூட மரண அடி வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதேபோல், விமர்சன ரீதியாகவும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை.
இதனால், ரஜினியின் ஜெயிலர் படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. முதன்முறையாக இயக்குநர் நெல்சனுடன் கை கோர்த்தார் ரஜினி. முன்னதாக பீஸ்ட் தோல்வியடைந்ததால் ரஜினியின் தலைவர் 169ல் இருந்து நெல்சன் நீக்கப்படலாம் என சொல்லப்பட்டது. ஆனால், இறுதியாக அவரையே ஓக்கே செய்த ரஜினி, அதற்கான காரணத்தையும் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் மனம் திறந்து பேசினார். இந்நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
ஆகஸ்ட் 10 முதல் 15ம் தேதி வரையிலான தொடர் விடுமுறை காரணமாக, ஜெயிலர் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் பரபரப்பாக நடந்தது. இதனால் ஜெயிலர் படத்தின் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் திரையரங்க உரிமையாளர்களுக்கு லாபமாக அமைந்துள்ளது. நல்ல ஓபனிங் இருந்தாலும் கலவையான விமர்சனங்களே கிடைத்தன. அதேபோல் இரண்டாவது வாரத்தில் இருந்து வசூல் மிக மோசம் என சொல்லப்படுகிறது. முதல் வாரம் 375 கோடி ரூபாய் வசூலித்த ஜெயிலர், இரண்டாவது வாரம் 175 கோடி மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் ஒட்டுமொத்தமாக இதுவரை 550 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது ஜெயிலர் திரைப்படம். இந்தப் படம் வெளியாகும் முன்னரே இமயமலைக்கு பறந்துவிட்டார் சூப்பர் ஸ்டார். அதன்பின்னர் உபி சென்று அம்மாநில முதலமைச்சர் யோகியின் கால்களிலும் விழந்து, அதுகுறித்து விளக்கம் கொடுத்திருந்தார். இந்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில், சென்னை திரும்பிவிட்ட ரஜினி ஜெயிலர் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடியுள்ளார்.
கடந்த வாரம் இயக்குநர் நெல்சன் தலைமையில் ஜெயிலர் சக்சஸ் மீட் நடைபெற்றது. ஆனால், இந்த முறை ரொம்பவே சைலண்டாக சக்சஸ் பார்ட்டி கொண்டாடியுள்ளது படக்குழு. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் உட்பட அவரது உதவி இயக்குநர்களும் கலந்துகொண்டனர். அப்போது ரஜினியுடன் படக்குழுவினர் எடுத்துகொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேநேரம் இயக்குநர் நெல்சன் உட்பட யாருக்கும் எந்த பரிசும் கொடுக்கவில்லை.

விக்ரம் படம் வெற்றிப்பெற்றதை உலகநாயகன் கமல்ஹாசன் பிரம்மாண்டமாக கொண்டாடித் தீர்த்தார். படக்குழுவினர், செய்தியாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உட்பட பலருக்கும் விருந்து கொடுத்து அசத்தினார். குறிப்பாக லோகேஷ் கனகராஜ்ஜுக்கு கார், உதவி இயக்குநர்களுக்கு பைக் ஆகியவற்றை கொடுத்து மாஸ் காட்டினார். அதேபோல் ஜெயிலர் வெற்றிக்காக நெல்சனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி கார் பரிசளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சக்சஸ் பார்ட்டியில் பங்கேற்ற பின்னர் சைலண்டாக கிளம்பிவிட்டார் ரஜினிகாந்த். இதனால் நெல்சன் உட்பட அவரது உதவி இயக்குநர்கள் அப்செட் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையறிந்த நெட்டிசன்கள், ரஜினி எப்போதும் கமல் அளவிற்கு வர முடியாது என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











