விஜய்யை எதிர்க்கும் ஜேம்ஸ் வசந்தன்.. கார் கண்ணாடியை உடைத்தது யார்?.. முடிவுக்கு வந்த பஞ்சாயத்து
சென்னை: சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி சில படங்களுக்கு இசையமைத்த ஜேம்ஸ் வசந்தன் இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் அரசியல் ரீதியாகவும், பொது விஷயங்களிலும் தனது அதிரடி கருத்தையும் வெளியிடுகிறார். முக்கியமாக விஜய்யை கடுமையாக விமர்சித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க நேற்று அவர் உணவகத்துக்கு உணவு சாப்பிட சென்றபோது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கார் கண்ணாடி ஏன் உடைக்கப்பட்டது என்பது குறித்து தெரியவந்திருக்கிறது.
சசிகுமார் இயக்கி ஹீரோவாக நடித்த படம் சுப்ரமணியபுரம். இன்றுவரை அந்தப் படம் பலராலும் கொண்டாடப்படுகிறது. இனிமேல் இப்படி ஒரு படத்தை யாராலும் எடுக்க முடியாது என்பது அனைவரது நிலைப்பாடு. அந்தப் படத்தின் ப்ளஸ்களில் ஒன்று ஜேம்ஸ் வசந்தனின் இசை. பாடல்கள், பின்னணி இசையில் பட்டைய கிளப்பியிருந்தார். அதற்கு அடுத்ததாக ஈசன், பசங்க, நாணயம் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களைத்தான் கொடுத்தார். ஆனால் அவருக்கான மார்க்கெட் உயரவே இல்லை.

அதிரடி கருத்து: இப்போது சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாகவே ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் பொது விஷயங்களில் அதிரடி கருத்து தெரிவித்துவருகிறார். அதிலும் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யையும், அவரது தொண்டர்கள், ரசிகர்களையும் சகட்டுமேனிக்கு விளாசிவருகிறார். சமீபத்தில்கூட இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுடன் அவர் நடத்திய கலந்துரையாடல் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. ஜேம்ஸின் விமர்சனத்துக்கு வழக்கம்போல் தவெகவினர் எல்லை மீறி பதில் கொடுத்துவருகிறார்கள்.
கார் கண்ணாடி உடைப்பு: சூழல் இப்படி இருக்க நேற்று சென்னையில் உணவகம் ஒன்றுக்கு சாப்பிட சென்றார் ஜேம்ஸ் வசந்தன். உணவகத்துக்கு வெளியே அவரது கார் நின்றுகொண்டிருந்தது. சாப்பிட்டுவிட்டு அவர் வெளியே வந்து பார்த்தபோது கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்; காட்டமான பதிவை முகநூலில் பதிவிட்டிருந்தார். மேலும் தொடர்ந்து விஜய்யை அவர் எதிர்ப்பதால் தவெகவினர் இந்த செயலில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகமும் பலரிடம் எழுந்திருந்தது.
காவல் துறை விளக்கம்: இந்நிலையில் இதுகுறித்து திருவான்மியூர் காவல் துறை அளித்திருக்கும் விளக்கத்தில், "ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதில் அரசியல் எதுவும் இல்லை. உணவகம் அருகில் உள்ள வீட்டின் வாசலில் ஜேம்ஸ் வசந்தன் காரை நிறுத்தியிருக்கிறார். வீட்டின் உரிமையாளர்தான் கார் கண்ணாடியை உடைத்திருக்கிறார். பெண் ஒருவர் வீட்டுக்குள் செல்ல முடியாததால் இந்த சம்பவத்தை செய்திருக்கிறார்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜேம்ஸின் நன்றி: இந்த விஷயத்தில் தனக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் ஜேம்ஸ் வசந்தன், தன் முகநூல் பக்கத்தில், "கார் கண்ணாடி உடைப்பு என்பது சின்ன விஷயம்தான். இருந்தாலும் அது மனதை பாதித்துவிடக் கூடாது என்று ஓடிவந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கும் முகம் தெரியாத உங்கள் அனைவருக்கும் என் நன்றி! தொலைபேசியில் அழைத்து பல்வேறு விதங்களில் உதவிட கட்சி பேதமின்றி முன்வந்த அரசியல் தலைவர்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும், பிற அமைப்புகளுக்கும், அன்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
ஆறுதலைத் தாண்டி, இதைப்போன்ற அறமற்ற செயல்களை கண்டிப்பது அவசியம். அதைப் பொறுப்போடு செய்த யாவருக்கும் வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications