கரூர் துயரம்.. பேய்கள் துரத்தும்.. விஜய்க்கு எதிராக களமிறங்கிய இசையமைப்பாளர்.. செம கோபத்துல இருக்காரு
சென்னை: நடிகர் விஜய் தனது கட்சி தொண்டர்களை சந்திக்கும் விதமாக வாராவாரம், 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை அறிவித்தார். அதன்படி கடந்த வாரம் சனிக்கிழமை கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பயணம் செய்து சந்தித்தார். கரூரில் அவர் வருகையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
உங்கள் விஜய் நா வரேன் என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தவெக தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை அறிவித்தார் விஜய். வாராவாரம் சனிக்கிழமை மட்டும் இந்தப் பயணத்தை அவர் செய்தார். திருச்சியில் இருந்து ஆரம்பித்த அவரது பயணம் கடந்த வாரம் சனியில் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நடந்தது. விஜய்யை காண்பதற்கு பலர் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.
பெரிய அசம்பாவிதம்: நாமக்கல்லில் காலை 8.45 மணிக்கும், கரூரில் மாலை 5 மணிக்கும் விஜய் பேசுவதாக இருந்தது. ஆனால் அவரோ சென்னையிலிருந்தே காலை 8.45க்குத்தான் புறப்பட்டார். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. ஒருவழியாக கரூருக்கு அவர் வந்து பேச ஆரம்பித்தபோது மாலை 7 மணி. அதற்குள் அலையென கூட்டம் திரண்டுவிட்டது. விஜய் பேசிக்கொண்டிருந்தபோதே தொண்டர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்க ஆரம்பித்தார்கள். மொத்தம் 40க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

ஜேம்ஸ் வசந்தன் பதிவு: இந்த சம்பவத்துக்கு பலரும் விஜய்க்கு எதிராக கண்டனத்தை எழுப்பிவருகிறார்கள். அவரும் ட்வீட் போட்டதோடு சரி. அதற்கு பிறகு எதுவும் பேசவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில், "நேற்று வரை நம்மோடு பேசித்திரிந்த 40 பேர் கூட்ட நெரிசலில் நசுங்கி, மூச்சுதிணறி, கொடுமையாக மரணித்திருக்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர், மூவர் என பல்வேறு விதமான இழப்புகள். கரூர் முழுவதும் மரண ஓலம். குடும்பங்களில் ஒப்பாரி.
என்ன நடந்தால் திருந்துவாய்: இழவு வீடுகளில் வெறுமையைப் பார்த்துக்கொண்டு அம்மா, அப்பா, கணவன், மனைவி, பெற்றோர் என எல்லோரும் விவரிக்கமுடியாத விரக்தியில் அமர்ந்திருக்க - "WE STAND WITH VIJAY" என்று கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் சமூக ஊடகங்களில் செய்தி பரப்புகிறீர்களே, வீணாய்ப் போனவர்களே! உனக்கு என்ன நடந்தால் நீ திருந்துவாய்? எது நடந்தால் உனக்கு இழப்பின் அருமை புரியும்?
ஒரு விபத்தின் அடிப்படை உண்மைகளை விளங்கிக்கொள்ள முடியாத அளவுக்கா உன் அறிவு மழுங்கியிருக்கிறது? ஒரு நடிகனை ரசிப்பது உன் மனசாட்சியைக் கொல்லும் அளவிற்கா கொண்டுபோய் விடும்? அவன் நடித்து புகழும், பணமும் ஈட்டியதைவிட உனக்காக என்ன செய்துவிட்டான்? எதற்காக 40 உயிர்களின் இழப்பைக் கூட கொச்சைபடுத்தும் அளவிற்கு தரம்தாழ்ந்து போனாய்? தமிழ்நாட்டை வியந்துபார்க்கும் பிற மாநிலங்களும், பிற நாடுகளும், நம்மை ஏளனமாய் பார்க்கவைத்து விட்டீர்களே! மரணித்தவரின் ஆன்மாக்கள் உங்களை விடாது! பேய்கள் உங்களைத் துரத்தும்! உங்கள் வாழ்வு சிறக்காது! அவைகளின் சாபம் உங்களை விரட்டிப் பிடிக்கும்! கொடுமையின் உச்சத்தை நீ அனுபவிக்கும் முன் திருந்திவிடு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











