தக் லைஃப் சிறந்த படம்.. அது மட்டும் ஆங்கிலத்தில் வந்திருந்தால்.. சர்ட்டிஃபிக்கேட் கொடுத்த பிரபலம்
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த திரைப்படம் தக் லைஃப். பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. படத்தின் மேக்கிங், கதை என எதுவுமே இதில் ஒழுங்காக இல்லை என்று ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினார்கள். விமர்சன ரீதியாக பலத்த அடியை சந்தித்த அந்தப் படம் வசூலிலும் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் படத்தை பாராட்டியிருக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்த படம் தக் லைஃப். நீண்ட வருடங்கள் கழித்து கமலும் மணிரத்னமும் இணைந்ததாலும்; கமலுடன் சிம்பு முதன்முறையாக சேர்ந்து நடித்ததாலும் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆர்வத்தோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு படத்தில் இடம்பெற்ற ஒரு விஷயம்கூட கனெக்ட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன பிரச்னை?: இந்தப் படத்தின் கதையை எழுதியது கமல்ஹாசன். படத்தின் கதை ஒரு பெண்ணுக்காக தந்தையும், வளர்ப்பு மகனும் அடித்துக்கொள்வது போன்று இருந்தது. முக்கியமாக கேங்ஸ்டர்களுக்குள் நடக்கும் பிரச்னைதான் இந்தப் படம் என்றாலும்; அதை விட்டுவிட்டு படம் எங்கெங்கோ ட்ராவல் ஆனது. இதனால் காண்டான ரசிகர்கள் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். வசூல் மற்றும் விமர்சானம் என இரண்டு ஏரியாக்களிலும் படம் மொரட்டு அடி வாங்கியது.
கர்நாடகாவில் ரிலீஸ்: இதற்கிடையே கன்னட மொழி குறித்து கமல் பேசியது சர்ச்சையானதால் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸாகாமல் இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கமல் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடப்பட அம்மாநில அரசு முழு பாதுகாப்பை கொடுக்க வேண்டும். வன்முறைகள் ஏற்ப்ட்டால் அரசு தடுக்க வேண்டும். யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறது. எனவே விரைவில் அந்த மாநிலத்தில் படம் ரிலீஸாகவிருக்கிறது.

ஜேம்ஸ் வசந்தன் பதிவு: இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் தக் லைஃப் படம் குறித்து தனது முகநூல் பக்கத்தில், "நேற்றிரவு 'Thug Life' படம் பார்த்தேன். அசந்துவிட்டேன். நல்ல படம். மிக நல்ல படம். ஆனால் ஏன் இதை சிலர் மோசமாக விமர்சித்தார்கள் என்பது எனக்கு கொஞ்சம்கூட விளங்கவில்லை. ஒரு underworld gangster படத்துக்குத் தேவையான எல்லாமும் சரியான விகிதத்தில் இருந்தது. இதுவே English மொழியில் ஹாலிவுட் நடிகர்கள் நடித்திருந்தால் ரசித்துப் பாராட்டியிருப்போம்; அல்லது ரசித்தது போல நடித்திருப்போம்.
சலிப்பை ஏற்படுத்தவில்லை: ஒரு நல்ல படத்தின் அத்தனை அம்சங்களும் உயர்தரத்தில் இருந்தன. ஆழமான கதை, அட்டகாசமானத் திரைக்கதை, அசரவைக்கிற locations, அதை அருமையாகக் கண்முன் கொண்டுவந்த ஒளிப்பதிவு, சர்வதேச தரத்தில் பின்னணி இசை, ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருத்தமான நடிகர்கள், அவர்களின் அடக்கமான நடிப்பு, அற்புதமான ஒலிக்கலவை, படத்தை விறுவிறுப்பாக்கிய படத்தொகுப்பு என எல்லாமே ஒருசேர அசத்திய கலவை. ஒரு காட்சிகூட சலிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வியப்பு!
அவர்கள் வரங்கள்: முடிவை பலவிதத்தில் சிந்தித்துப் பார்த்தேன். சிம்புவின் கதாபாத்திரம் இறக்காமல், கமல் கதாபாத்திரம் இறந்திருந்தால் எப்படியிருக்கும்? இரு கதாபாத்திரங்களும் இறந்து நாசர் கதாபாத்திரம் நிலைத்து நின்றால் எப்படியிருக்கும்? எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் படத்தின் சிறப்புக்கும் அதற்கும் தொடர்பில்லை. வெவ்வேறு உணர்வுகளோடு வெளியேறியிருப்போம், அவ்வளவுதான். இதுவரை இந்தப்படத்தைப் பார்க்காதவர்கள் போய்ப்பாருங்கள். சமூக ஊடகங்கள் அரசியலையும் கலையையும் போட்டுக் குழுப்பிக்கொள்கிற மலிவான காலகட்டத்தின் சித்து விளையாட்டுகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள். மணிரத்னமும் கமல்ஹாசனும் ரஹ்மானும் ரவி K சந்திரனும் இந்தியாவுக்குக் கிடைத்த வரங்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











