பிரபலங்கள் நடுநிலைமையோடு பேச வேண்டுமா?.. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஓபன் டாக்
சென்னை: சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன். அந்தப் படத்தின் இசை கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து பசங்க, நாணயம் உள்ளிட்ட படங்களிலும் அவரது இசை அருமையாக இருந்தது. இதனால் அனைவராலும் அறியப்பட்டவர். அதற்கு முன்பு தொகுப்பாளராகவும் பிரபலமானவர். தனது மனதில் தோன்றும் கருத்துக்களை தைரியமாக வைக்கக்கூடியவர். இந்நிலையில் அவரது முகநூல் பதிவு சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்டிருக்கும் பதிவில், "தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இன்று தகவல் என்பது எல்லாருக்கும் கிடைப்பதால் பல புரிதல்களும், அவரவர் நினைப்பதையெல்லாம் சமூக வலைதளங்களில் கொட்டுவதால் பல தவறான கருத்துகளும், கோட்பாடுகளும் கூட பெரும்பாலானோர் மனங்களில் நிலைபெற்று விடுகின்றன.அப்படி பலர் மனங்களில் தங்கிவிட்ட இரு கருத்துகளைத் தெளிவுபடுத்தும் நோக்கந்தான் இந்தப் பதிவு.

1. பத்திரிகையாளர் என்பவர் நடுநிலையாக இருக்கவேண்டும்.கேட்டமாத்திரத்தில், "ஆம்! அதுதானே சரி!" எனத் தோன்றும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. ஒரு பத்திரிகை என்பது தனிப்பட்ட ஒன்று போல உணரப்பட்டாலும் அது பல தனி நபர்களின் பங்களிப்பின் தொகுப்பு. செய்தி சேகரிப்பவர் எல்லாருமே தனித்தனி ஆளுமைகள். அவரவர்க்கென ஒரு நம்பிக்கை, கோட்பாடு, கருத்து இருக்கும். அவர்கள் கேட்கிற, கவனிக்கிற, சேர்க்கிற செய்திகளில் அவர்களது பார்வை உள்ளடக்கி இருக்கும்.
இப்படி எல்லாவற்றையும் பலரும் கொண்டுவந்து கோர்த்தாலும், அதில் என்ன கருத்து ஒட்டுமொத்தமாக வெளிப்பட வேண்டும் என்பது அந்த பத்திரிகை நிறுவனத்தின் அல்லது தனிப்பட்ட உரிமையாளரின் கொள்கையாக இருக்கும். அவர்கள் சார்ந்திருக்கிற கோட்பாட்டிற்கு வலுசேர்ப்பதாகத்தான் அது இருக்கும். இது இயல்பு; இதை யாரும் மாற்றவும் முடியாது, அதற்கு அவசியமும் இல்லை. ஏதோ ஒரு சாராரின் ஆதரவாகத்தான் யாருமே இருக்கமுடியும்.
இது பத்திரிகையாளருக்கு மட்டுமல்ல; பொதுமக்களுக்குந்தான். பெரிய ஆதரவாளராக இருப்பதில்லை, ஆனால் பெரும்பான்மையான செயல்பாடுகள் ஏற்புடையதாக இருக்கும். ஏற்க இயலாத சிலவும் இருக்கும், அவற்றைப் பெரிதுபடுத்திக் கொள்வதில்லை. இதுதான் யதார்த்தம்.
2. பிரபலங்கள் பொதுவானவார்களாக இருக்கவேண்டும்; நடுநிலையோடு பேசவேண்டும். என்னிடமும் இதைப் பலர் சொல்வதுண்டு. இந்த அடிப்படையிலேயே என்னை விமர்சிப்பதும் உண்டு. அண்மையில் அதிகமான அறிவுரையும் இதுதான். ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டும். பெரும்பாலானோர் வாக்களிக்கிறோம். யாரோ ஒருவருக்கு வாக்களிக்கத்தானே போகிறோம். கட்சி அரசியல்தான் நம் அரசியல் முறை. ஏதோ ஒரு கட்சிக்குத்தான் வாக்களிக்கப் போகிறோம். சுயேச்சைகளுக்கும், NOTA-வுக்கும் வாக்களிக்கிற மேதாவிகளைப் பற்றி பேசவேண்டியதில்லை.
எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறோமோ அதை பொதுமக்கள் யாரும் வெளியில் சொல்வதில்லை, தங்கள் குடும்பத்தினர், நண்பர்களைத் தவிர. ஆனால், பிரபலங்களில் இருவகை. மறைவாய் வைத்துக்கொள்பவர்; வெளியில் சொல்கிறவர். வெளியில் சொல்லாததற்குக் காரணம் - எதற்கு ஒருவரை ஆதரிப்பதற்காக பலரைப் பகைத்துக்கொண்டு என்கிற சுய பாதுகாப்பு எண்ணம். ஏன் இந்தக் கட்சியை ஆதரிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்வதற்கும் இரு காரணங்கள் இருக்கலாம். அந்தக் கட்சியிடம் ஏதாவது எதிர்பார்த்து அபிமானியாக அறிவித்துக் கொள்வது; அல்லது இது நல்லது என்கிற உறுதியான நம்பிக்கையின் பேரில் பிறரையும் அதற்கு ஆதரவு கொடுக்கச் சொல்வது.
அதனால், யாரானாலும் ஏதோ ஒரு கட்சியை ஆதரிக்கிறவராகத்தான் இருப்போம். நடுநிலை என்று ஒன்றில்லை. அதிலும் ஒரே ஒரு சிறு வேறுபாடு உண்டு. அதையும் பார்த்துவிடுவோம். என்ன நடந்தாலும் அதே கட்சிக்குத்தான் வாக்களிப்பேன் என்கிற விசுவாசமான வாக்காளர். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றார்போல மாற்றிக்கொண்டே இருக்கும் தேவை கருதி வாக்களிக்கும் வாக்காளர்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
