Jana Nayagan Audio Launch: 'One Last Dance' ரசிகர்களை எமோஷனலாக்கிய விஜயின் நடனம்.. மிஸ் யூ தளபதி
மலேசியா: நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த இசை வெளியீட்டு விழா மலேசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. விஜய் பேச்சு, குட்டிக்கதை உள்ளிட்ட பலவற்றுக்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு, கூடுதல் சந்தோஷம் அளிக்கும் விதமாக, தளபதி கச்சேரி பாடலை பாடினார். அதேபோல் அந்த பாடலுக்கு நடனம் ஆடவும் செய்தார். அவர் நடனமாடியது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
ஜன நாயகன் படத்தில் விஜய் குரலில் உருவான பாடல் தளபதி கச்சேரி பாடல். இந்த பாடல் படக்குழு தரப்பில் முதல் பாடலாக ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த பாடலில் விஜய் உடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் நடனமாடி இருந்தார்கள். இப்படி இருக்கும்போது, இந்த பாடலை பாடி முடித்த பின்னர், விஜய்யை நடனமாடச் சொல்லி ரசிகர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. உடனே விஜய், ஒப்புக் கொண்டு, நடனமாடினார். இதைப் பார்த்த ரசிகர்கள் ஆரவாரத்தில் உற்சாகமடைந்தனர். இது தொடர்பாக ரசிகர்கள் இது தளபதியின் ஒன் லாஸ்ட் டேன்ஸ் என்று மிகவும் எமோஷனலாக பதிவிட்டும் பகிர்ந்தும் வருகிறார்கள்.

நடிகர் விஜய் பேசுகையில் பல எமோஷனலான எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். இது அவரது ரசிகர்களை ரொம்பவும் எமோஷனலாக டச் செய்துள்ளது. விஜய்க்கு முன்னதாக பேசிய பலரும் விஜய் அரசியலுக்கு சென்றாலும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். இப்படி இருக்கும்போது, நடிகர் விஜய் அந்த கோரிக்கைக்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் பேசியிருந்தார்.
குறிப்பாக அவர் பேசுகையில், " முதல் நாளில் இருந்தே என்னுடன் பயணிக்கும் எனது ரசிகர்கள். அவர்கள் ஏதோ, ஒன்று இரண்டு நாட்கள் எனக்காக நிற்கவில்லை, கடந்த 33 ஆண்டுகளாக எனக்காக பல இடங்களில் நின்றுள்ளார்கள். அதனால் தான் நான் இன்றைக்கு இங்கு நிற்கிறேன். எனக்காக 33 ஆண்டுகளாக அவர்கள் நின்றார்கள், அடுத்த 30, 33 ஆண்டுகளுக்கு நான் அவர்களுக்காக நிற்கப் போகிறேன்.

எனக்கு ஒன்னு என்றால் ரசிகர்கள் தியேட்டரில் நிற்கிறார்கள். இனி அவர்களுக்கு ஒன்று என்றால் நான் அவர்கள் வீட்டில் நிற்பேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்த ரசிகர்களுக்ககா நான் சினிமாவையே விட்டுக் கொடுக்கிறேன்" என்று பேசினார். இவரது இந்த பேச்சுக்கு ரசிகர்கள் மைதானமே அதிரும் அளவுக்கு ஆரவாரம் செய்தனர்.


Click it and Unblock the Notifications











