மன்னிச்சு பாருங்க.. வாழ்க்கையே அழகா மாறும்.. மலேசியாவில் விஜய் இப்படியெல்லாம் பேசினாரா?
சென்னை: இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் என்ன பேசினார் என்பது இணையத்தில் வெளியான நிலையில், நேற்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இசைவெளியீட்டுவிழா ஒளிபரப்பப்பட்டது. இதில், தளபதி விஜய் பேசிய பல சுவாரசியமான விஷயத்தை பார்க்கலாம்.
பல பெருமைகளைப் பெற்ற மலேசியாவில் என்னுடைய கடைசி திரைப்படமான, இந்த வார்த்தையை சொல்லும்போது எனக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் என்ன செய்வது. ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த நேரத்தில் மலேசிய அரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் சினிமா ஆரம்பித்து பல வருஷமாகவிட்டது. இவ்வளவு வருஷமாக நம்முடைய தமிழ் மக்களுடைய சந்தோஷத்தில், துக்கத்தில், கொண்டாட்டத்தில், குடும்பம், ஆன்மீகம், உழைப்பு, அரசியல் என அனைத்திலும் தமிழ் சினிமா கலந்து இருக்கிறது. அப்படிப்பட்ட சினிமாவில் நானும் ஒரு நடிகராக இருக்கிறேன் என நினைக்கும் போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது.

விஜய் பேச்சு: சினிமாவை விட்டு ஏன் விலகி விலகுகிறீர்கள் என பல பேர் கேட்கிறார்கள். சினிமா என்பது மிகப்பெரிய கடல் அதில், நான் ஒரு கரையோரமாக சிறியதாக மணல் வீடு ஒன்று கட்ட வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். ஆனால், அதை ஒரு மாளிகையாக மாற்றி தந்தது நீங்கள் தான். என் ரசிகர்களாகிய நீங்கள் தான். கடந்த 33 ஆண்டுகளாக ரசிகர்கள் எனக்காக எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார்கள். என் வளர்ச்சியிலும், வெற்றியிலும் அவர்களின் பங்கு மிகப்பெரியது. இந்த 33 வருடங்களாக அவர்கள் எனக்கு கொடுத்த அன்பையும், ஆதரவையும், அடுத்த 33 வருடங்களுக்கு நான் அவர்களுக்கு திருப்பி கொடுக்க போகிறேன். எனக்கு ஏதாவது ஒன்று என்றால் ரசிகர்கள் தியேட்டர் வாசலில் வந்து நிற்கிறார்கள். நாளை அவர்களுக்கு ஒன்று என்றால், நான் அவர்கள் வீட்டு வாசலில் போய் நிற்பேன். எனக்காக தங்கள் அனைத்தையும் விட்டு கொடுத்த ரசிகர்களுக்காக, நான் எனக்கு மிகவும் பிடித்த சினிமாவை விட்டு கொடுக்கிறேன். இது அவர்களுக்காக நான் செய்யும் கைமாறு மட்டுமல்ல, நன்றிக்கடன் என்றார்.
குட்டி கதை: இதைத்தொடர்ந்து குட்டி கதை சொல்லிய விஜய், ஒரு ஆட்டோக்காரர் கர்ப்பிணியை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். வெளியில் மழை பெய்ததால், அந்த ஆட்டோக்காரர் தன்னிடம் இருந்த குடையை கர்ப்பிணி பெண்ணிடம் கொடுக்கிறார். அப்போது அந்த பெண், அண்ணா இந்த குடையை மறுபடியும் நான் எப்படி உங்களிடம் திருப்பி கொடுப்பது என கேட்க. அந்த ஆட்டோ டிரைவர், வேறு யாருக்காவது தேவைப்படுபவர்களிடம் குடையை கொடுத்து விடு என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். அந்த கர்ப்பிணி பெண் குடையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு உள்ளே செல்லும்போது, மருத்துவமனையின் வாசலில், ஒரு வயதானவர் மழைக்காக ஒதுங்கி நிற்பதை பார்த்த, கர்ப்பிணி பெண் அந்த குடையை அந்த பெரியவரிடம் கொடுத்துவிட்டு ஐயா, இந்த குடையை எடுத்துக்கொண்டு போங்க என சொல்ல, அந்த பெரியவரும் இந்த குடையை மீண்டும் உங்களிடம் எப்படி கொடுப்பது என கேட்க, அந்த கர்ப்பிணி பெண் சிரித்துக்கொண்டே வேறு யாருக்காவது தேவைப்படுபவர்களுக்கு குடையை கொடுங்க என சொல்கிறார்.
முடிந்த உதவிகளை செய்யுங்கள்: பின் பெரியவர் பேருந்து நிலையத்திற்கு வருகிறார். அங்கு ஒரு பூக்கார அம்மா, தலையில் அட்டைப் பெட்டியை வைத்துக்கொண்டு பூ வியாபாரம் செய்து கொண்டு இருக்கிறார். அதைப்பார்த்த அந்த பெரியவர் அந்த பூக்கார அம்மாவிடம் குடையை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார். பூக்கார அம்மா வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பி வரும்போது, பள்ளி மாணவி ஒருவர் புத்தகம் நனைத்துவிடக்கூடாது என மழையில் ஓடி வருவதை பார்த்த பூக்கார அம்மா, அந்த குடையை அந்த பெண்ணிடம் கொடுக்கிறார். மறுபக்கம் அந்த பள்ளி மாணவியின் அப்பா, மகள் மழையில் நனைந்து வருவாளே என்ற வேதனையுடன் குடையுடன் நடந்து வருகிறார். எதிரில் தன்னுடைய மகள் குடையுடன் வருவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார். அவர் வேறு யாரும் இல்லை, கர்ப்பிணிக்கு குடை கொடுத்த ஆட்டோ டிரைவர் தான். இந்தன் கதையின் மூலம் நான் சொல்லவருவது என்னவென்றால், முடிந்த வரைக்கும் சிறிய சிறிய உதவிகளை செய்து கொண்டே இருந்தால், வாழ்க்கை மிகவும் ஜாலியாக சென்று கொண்டே இருக்கும்.
அறிவுரை : வெள்ளத்தில் தவிக்கும் ஒருவருக்கு நீங்கள் படகு கொடுத்தீர்கள் என்றால், பாலைவனத்தில் நீங்கள் தவிக்கும்போது, அது ஒட்டகமாக வந்து நிற்கும். யாராவது உங்களுக்கு கெடுதல் செய்து விட்டால், அதற்கு நீங்கள் அவர்களை பழிவாங்கி விட்டு, அந்த நாள் முழுக்க மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால், அதே மனுஷனை நீங்கள் மன்னித்து பாருங்கள், வாழ்நாள் முழுக்க நீங்கள் மன நிம்மதியாக இருப்பீர்கள். யாரையும் கஷ்டப்படுத்துவதற்கோ, யாரையும் அவமானப்படுத்துவதற்கோ, யாரையும் பழி வாங்குவதற்கோ இல்லை இந்த வாழ்க்கை. உங்களால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை நீங்கள் செய்து பாருங்கள் அது என்றோ ஒருநாள் உங்களுக்கு கை கொடுக்கும் என நான் நம்புகிறேன் என்றார்.
திறமையானவர்: அதைத்தொடர்ந்து, அனிருத் குறித்து பேசிய விஜய், ஜனநாயகம் திரைப்படத்தின் ஹீரோ அனிருத் தான். நான் அவருக்கு ஒரு பெயர் வைக்கலாம் என இருக்கிறேன். MDS அதாவது "மியூசிக்கல் டிபார்ட்மென்டல் ஸ்டோர் " அந்த ஸ்டோரை திறந்து உள்ளே சென்று விட்டால், நமக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியே வரலாம். அனிருத்தின் இசையை கேட்டு நான் பெரிய அளவில் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அது என்னுடைய படமாக இருந்தாலும் சரி, மற்றவர்களின் படமாக இருந்தாலும் சரி அனைத்திலும் அவருடைய திறமை தெரியும் அந்த திறமையால் அவர் படிப்படியாக உயர்ந்து கொண்டே செல்கிறார்.
அதிரடி பேச்சு: ஜனநாயகம் திரைப்படத்தின் இயக்குனர் ஹெச் வினோத், ஒரு சமூகப்பொறுப்புள்ள இயக்குனர். இது ஒரு கமர்சியல் திரைப்படமாகவே இருந்தாலும், அதிலும், சமூகத்திற்கு தேவையான சில விஷயங்களை எப்படி சொல்லலாம் என்பதில் மிகவும் கவனமாக இருக்கக் கூடியவர். ஏற்கனவே அவருடன் இரண்டு படங்கள் பண்ணுவதாக இருந்தது. அது மிஸ் ஆகிவிட்டது. ஆனால், ஜனநாயகம் திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து வேலை செய்ததில் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் என்று விஜய் அந்த விழாவில் பேசினார்.


Click it and Unblock the Notifications











