Vijay Kutty Story: தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி.. வெள்ளத்தை மென்ஷன் பண்ணி சொல்லி இருக்காரே!
மலேசியா: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விஜய் பேசிய, பாடியது, நடனமாடிய உள்ளிட்ட பலவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவரது குட்டி ஸ்டோரி ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றுள்ளது.
இசை வெளியீட்டு விழா என்றாலே, தளபதியின் மாஸான பேச்சு, கிளாஸான குட்டி ஸ்டோரி இல்லாமல் முடியாது. அதன் பின்னர் தான் ஒவ்வொன்றாக வந்து இணைந்து கொண்டது, அவர் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது உள்ளிட்டவை. இப்படி இருக்கும்போது அவரது சினிமா வாழ்க்கையில் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தளபதி சொன்ன குட்டி ஸ்டோரி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் பேசுகையில், ஒரு குட்டி ஸ்டோரி மாதிரி ஒன்று சொல்லுகிறேன். " ஒரு ஆட்டோக்காரர், ஒரு கர்ப்பிணி பெண்ணை மழையில் அழைத்துக் கொண்டு போகிறார். அந்த பெண்ணிடம் குடை இல்லாததால் தன்னிடம் இருக்கும் குடையை கொடுக்கிறார். அதற்கு அந்த பெண், இதை உங்களுக்கு எப்படி திருப்பிக் கொடுப்பது என்று கேட்டார். அதற்கு உடனே தேவைப்படும் யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்று கூறினார்.

குட்டி ஸ்டோரி: அதேபோல் மருத்துவமனைக்குச் சென்ற கர்ப்பிணி, அங்கு முதியவர் ஒருவர் குடை இல்லாமல் இருந்ததைப் பார்த்து அவருக்கு அந்த குடையைக் கொடுக்கிறார். அந்த முதியவர் குடையை ஒரு பூக்கார அம்மாவிடம் கொடுகிறார். அந்த பூக்கார அம்மா ஒரு பள்ளிச் சிறுமியிடம் கொடுக்கிறார். அந்த சிறுமியின் அப்பா, அந்த ஆட்டோகாரர்.
ரசிகர்களுக்கு அட்வைஸ்: இந்த கதையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது, நாம் மற்றவர்களுக்கு எப்போதும் ஏதாவது ஒரு உதவியைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். ஒரு பழமொழி ஒன்று உள்ளது வெள்ளத்தில் சிரமப்படுவோருக்கு படகு கொடுத்து உதவினால், அது நாளை பாலைவனத்தில் நீங்கள் சிரமப்படும் போது, ஒட்டகமாக வந்து நிற்கும் என்பது தான் அது" என்று தெரிவித்தார். இவரது இந்த குட்டிக் கதை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் குட்டிக் கதை சொல்வதற்கு முன்னதாக, ரசிகர்கள் TVK.. TVK.. TVK என்று கோஷமிட்டனர். இதைக் கேட்ட விஜய், ' வேண்டாம்ப்பா.. கோபித்துக்கொள்ளப்போகிறார்கள்' என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


Click it and Unblock the Notifications











