மறுபடியும் முதல்ல இருந்தா?.. ஜனநாயகன் படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளை சேர்க்க சொன்ன தணிக்கை குழு?
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்தின் விசாரணை உயர்நீதிமன்றத்தில் காரசார விவாதங்களுடன் நடைபெற்று வருகிறது. தயாரிப்பு நிறுவனம் எங்களுக்கு கால அவகாசம் கொடுக்கவில்லை என தணிக்கை குழு சார்பில் அரசு வழக்கறிஞர் வாதித்து வரும் நிலையில், நீக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் சேர்த்து அனுப்ப சொன்னாங்க, யுவர் ஹானர் என ஜனநாயகன் படம் சார்பாக வாதாடி வரும் வழக்கறிஞர் பராசரன் ஒரே குண்டாக போட தீர்ப்பு எப்படி வரும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாவதில் பெரும் சிக்கல்கள் நிலவிவரும் நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நண்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தணிக்கை வாரியம் சார்பில் காரசார வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்குப் பதிலடியாக, தணிக்கை வாரியம் விதிகளை மீறியுள்ளதாகப் படக்குழு தரப்பு குற்றம்சாட்டியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 9 அன்று 'ஜனநாயகன்' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், மத்திய தணிக்கை வாரியம் படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்தது. மேலும், மறு ஆய்வு குழுவுக்குப் படத்தை பரிந்துரை செய்தது. இதை எதிர்த்து ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஜனநாயகன் சென்சார் வழக்கு: இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மறு ஆய்வுக்கான பரிந்துரையை ரத்து செய்து, 'ஜனநாயகன்' படத்திற்கு உடனடியாக U/A சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, அதை எதிர்த்து தணிக்கை வாரியம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.
அன்றைய தினமே, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 'ஜனநாயகன்' படம் வெளியாக இன்னும் தடை தொடர்கிறது. இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து 'ஜனநாயகன்' படக்குழு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
தணிக்கை வாரியம் vs ஜனநாயகன்: அப்போது தணிக்கை வாரியம் தரப்பில், "மறுதணிக்கை தொடர்பாக நாங்கள் ஜனவரி 5 ஆம் தேதியே தகவல் சொல்லிவிட்டோம். படக்குழு ஜனவரி 6 ஆம் தேதிதான் வழக்குக்குச் சென்றார்கள். 'ஜனநாயகன்' படத்திற்குச் சான்று வழங்குவதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. 14 காட்சிகளை நீக்கிய பிறகு படத்தைப் பார்த்து முடிவு செய்யலாம் என்றுதான் கூறினோம்" என்று வாதிடப்பட்டது.
தொடர்ந்து, "அவர்கள் காட்சிகளை நீக்கிவிட்டதால் சான்றிதழ் கேட்டனர். ஆனால், இறுதி முடிவெடுப்பதற்கு முன்பாக, ஒரு புகார் வந்ததால் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ரூ.500 கோடி முதலீடு செய்துள்ளதால் உடனடி நிவாரணம் கோர முடியாது, எங்களுக்கு அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். 72 நிமிடங்களுக்கு மேலான படங்களுக்குத் தணிக்கை வாரிய தலைவர்தான் முடிவு செய்வார்" என தணிக்கை வாரியம் தரப்பு தெரிவித்தது.
தணிக்கை வாரியம் சார்பில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதைக் கேட்ட தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா, "படத்தைப் பார்த்தது யார்? மண்டல தணிக்கை வாரிய அதிகாரி படத்தைப் பார்த்தாரா? தனி நீதிபதி ஒரே நாளில் முடிவெடுத்துள்ளார். தணிக்கை வாரியத்திற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் தனி நீதிபதி முடிவு செய்துள்ளார். இன்றே உத்தரவு வழங்கச் சொல்லி உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.
உணவு இடைவேளைக்குப் பிறகு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது படக்குழு தரப்பில், "டிசம்பர் 18 ஆம் தேதி தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம். டிசம்பர் 19 ஆம் தேதி படத்தை பார்த்தோம். தணிக்கை வாரியம் ஆட்சேபனை செய்த காட்சிகளை நீக்கி கடந்த டிசம்பர் 25 ஆம் தேதியே சமர்ப்பித்துவிட்டோம்" என்று கூறப்பட்டது.
ஒளிவு மறைவு: மேலும், "ஆனால் அது தொடர்பான விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படவில்லை. தணிக்கை வாரியம் தொடர்பான அனைத்து தகவல்களும் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்ற விதி இங்கு மீறப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவில் தவறு இல்லை. விதிகளை ஆய்வு செய்துதான் தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்" என படக்குழு வாதிட்டது.
தொடர்ந்து, "மறு தணிக்கை என்று எங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தணிக்கைக் குழுவின் ஆட்சேபணைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. விதிகளின்படி 2 நாட்களில் சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவு செய்ய வேண்டும். மறு தணிக்கைக்கான உத்தரவு நகல் எதுவும் வழங்கப்படவில்லை" என்று படக்குழு தரப்பு தெரிவித்தது.
மேலும், "மத நம்பிக்கைக்கு எதிரான காட்சிகள் இருப்பதால் மறு தணிக்கை செய்வதாக மட்டுமே தகவல் கூறினார்கள். அவசர விசாரணைக்கு தணிக்கை வாரியம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மற்றபடி, படத்தில் என்ன புகார், யார் புகார் வைத்தார் போன்ற எந்தத் தகவல்களையும் சொல்லவில்லை. தணிக்கை வாரியத்தின் சார்பில் படத்தைப் பார்த்தவர்கள் புகார் அளிக்க முடியாது" என்றும் படக்குழு தரப்பு பதிலடி கொடுத்தது.
மீண்டும் சேர்க்கணுமா?: 15 காட்சிகள் நீக்க உத்தரவிடப்பட்டு அந்த காட்சிகள் நீக்கப்பட்ட பின்னர், மீண்டும் படத்தில் அந்த காட்சிகளை சேர்த்து மறுதணிக்கைக்கு அனுப்ப வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதாக படக்குழு மேலும், குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைக்குள் இந்த வழக்கு விசாரணை முடிந்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படுமா? அல்லது மேலும், வழக்கு மேல்முறையீட்டுக்கு செல்லுமா என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











