சிம்பு மட்டும்தான் பேசுறாரு.. விஜய் அண்ணானு சொன்னீங்க.. இப்போ என்ன ஆச்சு?.. விளாசும் பிரபலம்
சென்னை: ஜனநாயகன் திரைப்படத்தில் மதத்தை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக கூறி சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். இதனையடுத்து கேவிஎன் நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. நீதிமன்றமும் சாதகமான தீர்ப்பை கொடுக்கவில்லை. சூழல் இப்படி இருக்க ஜனநாயகன் பிரச்னை குறித்து பெரும்பாலான நடிகர்கள் வாய் திறக்கவில்லை. ஆனால் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில்கூட விஜய்க்கு ஆதரவாக பேசியிருந்தார்.
விஜய் - ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் படத்துக்கு சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்துவிட்டது. அதனையடுத்து நீதிமன்றத்துக்கு சென்றது கேவிஎன் நிறுவனம். முதலில் விசாரித்த தனி நீதிபதி படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்டார். அதனை எதிர்த்து சென்சார் குழு மேல்முறையீட்டுக்கு சென்று அந்த உத்தரவுக்கு தடை வாங்கியது.
மீண்டும் தனி நீதிபதி விசாரணை: இதனை எதிர்பார்க்காத படக்குழு சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்ல; மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே செல்லுங்கள் என அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம். சமீபத்தில் மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'விளக்கமளிக்க தணிக்கை வாரியத்துக்கு போதிய அவகாசம் தரவில்லை. மதத்தை புண்படுத்தும்படி காட்சிகள் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனி நீதிபதி மீண்டும் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்' என தீர்ப்பளித்தார்கள்.

அப்செட்டில் ரசிகர்கள்: இதனால் மீண்டும் வழக்கு ஆரம்பித்த இடத்திற்கே வந்திருக்கிறது. எப்போது தனி நீதிபதி விசாரணையை செய்து; சாதகமான தீர்ப்பை வழங்குவது; நாங்கள் எப்போது படத்தை கொண்டாடுவது என உச்சக்கட்ட சோகத்தில் இருக்கிறார்கள் தளபதி ரசிகர்கள். இது ஒருபக்கம் இருக்க; இந்த பிரச்னை ஆரம்பித்தபோது ரவி மோகன், சிம்பு, சிபி சத்யரஜ், சாந்தனு உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே விஜய்க்கு ஆதரவாக பேசினார்கள். பெரும்பாலான நடிகர்கள் வாயே திறக்கவில்லை.
மீண்டும் பேசிய சிம்பு: அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே பேசியவர்களும் மீண்டும் இவ்விவகாரம் குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. ஆனால் சிம்புவோ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்கூட, "ஜனநாயகன் விஜய்னு பிரிச்சி பார்க்க முடியாது இத்தனை வருஷம் சினிமாவுல இருந்திருக்கார். கடைசியா ஒரு படம் பண்ணி இருக்கார் அது திரையிக்கு வரணும்னு சினிமாத்துறைல ஒரு ஆதரவா அவருக்காக நிக்கணும்னு சொல்லி இருந்தேன் அதனால தான் நான் ட்வீட் போட்டிருந்தேன்.
நான் சரியான ஆள் கிடையாது: எனக்கு அரசியல் தெரியாது அதில் அனுபவமும் கிடையாது அரசியல் பத்தி பேசுறதுக்கு நான் சரியான ஆளு கிடையாது. அவரோட அரசியல் எதிர்காலத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார். தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக சிம்பு நிற்பதை பார்த்து ரசிகர்கள் அவரை கொண்டாடிவருகிறார்கள். இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.
செய்யாறு பாலு வீடியோ: அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "ஜனநாயகன் திரைப்பட பிரச்னை கிணற்றில் போடப்பட்ட கல் மாதிரி அப்படியே கிடக்கிறது. அதேசமயம் இப்படம் எப்போது வந்தாலும் பொங்கல்தான் என தளபதி ரசிகர்கள் சொல்கிறார்கள். திரைத்துறையில் நடிக்கும்போது விஜய்தான் எங்கள் அண்ணா என்று பல நடிகர்கள் சொன்னார்கள். ஆனால் இப்போதோ ஜனநாயகன் பற்றி வாயே திறக்கவில்லை. அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு பயம் இருக்கும். ஆனால் சிம்பு அப்படி இல்லை; தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக ஜனநாயகன் பிரச்னையில் பேசிவருகிறார்கள். அவருக்கு விஜய் ரசிகர்களும் பாராட்டு தெரிவிக்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











