ஜனநாயகன் பிரச்னை முடிவுக்கு வருவது இருக்கட்டும்.. டாப் ஹீரோவுடன் சேர்ந்த ஹெச்.வினோத்?
சென்னை: விஜய்யை வைத்து ஹெச்.வினோத் இயக்கிய ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்னை காரணமாக அந்தப் படம் இன்னமும் ரிலீஸாகவில்லை. இப்போது வெளியாகும் அப்போது வெளியாகும் என காத்திருந்து காத்திருந்து விஜய் ரசிகர்களும் சோர்ந்து போய்விட்டார்கள். அநேகமாக தேர்தல் முடிந்த பிறகுதான் படம் ரிலீஸாகும் என தெரிகிறது. இந்நிலையில் ஹெச்.வினோத் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சதுரங்க வேட்டை படத்தை இயக்கி தனது திரை பயணத்தை ஆரம்பித்த இயக்குநர் ஹெச்.வினோத்; முதல் படத்திலேயே பெரிய கவனத்தை ஈர்த்துவிட்டார். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தியை வைத்து இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவரை முக்கியமான இயக்குநர்கள் வரிசையில் சேர்த்தது. அதனையடுத்து அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய மூன்று படங்களை இயக்கினார். மூன்று படங்களும் சுமார் ரகம்தான். முக்கியமாக வினோத்தின் டச்சே இல்லையே என்று நொந்துகொண்டார்கள் ரசிகர்கள்.

ஜனநாயகன் வினோத்: அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கிய அவருக்கு; விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனையும் இயக்கும் வாய்ப்பு அமைந்தது. பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் இது என பலரும் கூறினாலும்; படத்தின் ட்ரெய்லரில் ஏகப்பட்ட விஷயங்கள் புதுமையாக இருந்ததாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். கண்டிப்பாக இந்தப் படம் விஜய்க்கு மட்டுமின்றி ஹெச்.வினோத்துக்கு இழந்த ஃபார்மையும் மீட்டுக்கொடுக்கும் என அனைவருமே ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள்.
ரிலீஸில் பிரச்னை: படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு விஜய்யின் ரசிகர்கள் எல்லாம் தயாராக இருந்தார்கள். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்சார் தரப்பிலிருந்து முட்டுக்கட்டை விழுந்தது. அதை நீக்குவதற்கு நீதிமன்றம்வரைக்கும் சென்றது பட தயாரிப்பு நிறுவனம். நீதிமன்றமும் கைவிட்டுவிட்டதால்; விரைவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என கேவிஎன் நிறுவனம் எடுத்த முயற்சிகளும் சோடை போயின.
எப்போது ரிலீஸ்?: படத்தையும் மறு தணிக்கை குழு பார்ப்பதற்காக அனுப்பி வைத்தது. கடந்த ஒன்பதாம் தேதியே அவர்கள் பார்ப்பதாக இருந்தது. சில காரணங்களால் படத்தை பார்க்கவில்லை. நிலைமை இப்படி இருக்க இன்று படத்தை பார்ப்பார்கள் என்று தகவல் வெளியானது. இருப்பினும் அவர்கள் பார்க்கவில்லை என்றே தெரிகிறது. அநேகமாக தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகுதான் இப்படம் திரைக்கு வரும் என திரைத்துறையில் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. எப்போது வந்தாலும் படத்தை மெகா ஹிட்டாக்கிட வேண்டும் என முழு முனைப்போடு இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
வினோத்தின் புதிய பயணம்: இப்படி ஜனநாயகன் பிரச்னை ஒரு முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டே இருக்கும் நிலையில் ஹெச்.வினோத் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்ததாக அவர் சூர்யாவை வைத்து படம் இயக்கவிருப்பதாகவும், அதனை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு தனுஷை வைத்து ஒரு படத்தையும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாவது பாகத்தையும் அவர் எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications















