Janagaraj: "நான் இதுவர அமெரிக்கா போனதே இல்ல... ஏன் இப்படிலாம் எழுதுறாங்க..?” ஜனகராஜ் வேதனை!
சென்னை: தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் ஒருவர் ஜனகராஜ்.
1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படத்தில் அறிமுகமான ஜனகராஜ், கடைசியாக '96'-ல் நடித்திருந்தார்.

ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதால், அவர் சினிமாவில் நடிப்பதில்லை என சொல்லப்பட்டது.
இந்நிலையில் ஜனகராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், இதுவரை அமெரிக்கா போனதே இல்லை எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஜனகராஜ் வேதனை
பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜனகராஜ். தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கிய ஜனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் நெருங்கிய தோஸ்தாகிவிட்டார். ரஜினி, கமல் படங்களில் அதிகம் நடித்துள்ள ஜனகராஜ், மற்ற நடிகர்களுடனும் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார்.

நாயகன், விக்ரம், அபூர்வ சகோதரர்கள், ராஜாதி ராஜா, பணக்காரன், அண்ணாமலை, பாட்ஷா, அக்னி நட்சத்திரம், அரங்கேற்ற வேளை, குணா, வீரா போன்ற படங்களில் ஜனகராஜ்ஜின் காமெடி ரொம்பவே பிரபலமானது. வித்தியாசமான சிரிப்பு, வெரைட்டியான உடல்மொழி என மாஸ் காட்டியவர் ஜனகராஜ். கடைசியாக விஜய் சேதுபதியின் 96 படத்தில் வாட்ச்மேனாக நடித்திருந்தார். தொடர்ந்து அவர் சினிமாவில் நடிக்காமல் இருப்பதற்கு, ஜனகராஜ் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டதுதான் காரணம் என சொல்லப்பட்டது.
இந்நிலையில், ஜனகராஜ்ஜின் சமீபத்திய பேட்டி வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதில் அவர் தனது கேரியர் பற்றியும் அமெரிக்கா செட்டில் குறித்தும் மனம் திறந்துள்ளார். அதாவது, நான் சென்னையில் தான் இருக்கிறேன், அமெரிக்கா செல்லவில்லை என்றுள்ளார். அதுமட்டும் இல்லாமல் இதுவரை அமெரிக்காவே செல்லாத நான், இப்போது அங்கே செட்டில் ஆகிவிட்டதாக பத்திரிகையில் எழுதுவது வேதனையாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
தனது மகனும் சென்னையில் தான் வேலை பார்க்கிறார். அவரும் அமெரிக்கா சென்றதே இல்லை. நல்ல வாய்ப்புகள் அமையாமல் தான் சினிமாவில் நடிக்காமல் இருக்கிறேன். சும்மா ஒரு கேரக்டர் கொடுத்து நடிக்கச் சொன்னால் எப்படி நடிப்பது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நல்ல கேரக்டர் அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் எனவும், இப்போதும் எல்லா நடிகர்களுடனும் போனில் பேசிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பத்திரிகைகளில் தன்னைப் பற்றி வரும் செய்திகளை பார்க்கும் போது வேதனையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிலர் என்னைப் பற்றி நல்லதாக எழுதுகின்றனர். இன்னும் சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை எழுதி கஷ்டப்படுத்துவதாகவும் ஜனகராஜ் கூறியுள்ளார். இந்தப் பேட்டியில் தனது காதல் திருமணம் உள்ளிட்ட பல சுவாரஸ்யங்களையும் ஜனகராஜ் பகிர்ந்துள்ளது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











