Janhvi Kapoor - கமல் - விக்னேஷ் சிவன் போட்ட பக்கா ஸ்கெட்ச்.. தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?
சென்னை: Janhvi Kapoor (ஜான்வி கபூர்) கமல் ஹாசன் தயாரித்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியிருக்கிறது.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் படம் மூலம் கோலிவுட்டில் கவனம் ஈர்த்தார். அந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதனையடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஏகே 62: இதனையடுத்து நவரசா ஆந்தாலஜியில் குறும்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் பெரிதாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க அஜித்தின் 62ஆவது படத்தை இயக்க கமிட்டானார் விக்னேஷ் சிவன். இந்த செய்தி வெளியானதும் கோலிவுட்டே ஆச்சரியப்பட்டது. மேலும், அஜித்தை வைத்து ஒரு சிறந்த படத்தை விக்னேஷ் சிவன் கொடுத்துவிடுவாரா என்ற கேள்வியையும் பலர் முன்வைத்தனர்.
வெளியேறிய விக்கி: நிலைமை இப்படி இருக்க விக்னேஷ் சிவன் சொன்ன முழு கதையும் அஜித்துக்கும், லைகாவுக்கும் பிடிக்காமல் போக ஏகே 62விலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், கதையை டெவலப் செய்வதற்கு பல மாதங்கள் நேரம் கொடுத்தும் ஒழுங்காக கதையை டெவலப் செய்யாமல் விக்னேஷ் சிவன் இருந்ததுதான் தயாரிப்பு தரப்புக்கு அவர் மேல் கோபம் என பேசப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் குறிப்பிட்ட நேரத்துக்குள் முழு கதையையும் ரெடி செய்துவிட்டார். கதையை சொன்னபோது கதையின் இரண்டாம் பாதியை தயாரிப்பு தரப்பு மாற்ற சொன்னதும்; அதற்கு ஒத்துக்கொள்ளாமல் விக்னேஷ் சிவன் வெளியேறியதும் பின்னர்தான் தெரியவந்தது.
அடுத்தது என்ன?: ஒரு படத்திலிருந்து இயக்குநர் வெளியேற்றப்பட்டால் அது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே உடனடியாக அடுத்த ஹீரோவை வைத்து படம் இயக்குவதற்கு விரும்புவார்கள். அந்தவகையில் விக்னேஷ் சிவன் அடுத்த படத்தை யாரை வைத்து இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த சூழலில் லவ் டுடே படத்தின் மூலம் சென்சேஷனல் ஆன இயக்குநரும், நடிகருமான ப்ரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார்.

கமல் தாயரிப்பு: இந்தச் சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் விக்னேஷ் சிவன் - ப்ரதீப் ரங்கநாதன் இணையும் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கவிருக்கிறார். கமலுக்கே ஒரு கதை பிடித்துவிட்டது என்றால் நிச்சயம் அந்தக் கதை சோடை போகாது. எனவே விக்னேஷ் சிவன் இந்தப் படத்தின் வெற்றி மூலம் கம்பேக் கொடுத்து தன்னை வெளியேற்றியவர்களுக்கு பதிலடி கொடுப்பார் என ரசிகர்களில் சிலர் கூறிவருகின்றனர்.
யார் ஹீரோயின்?: இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. பெரும்பாலும் நயன்தாராதான் இப்படத்தின் ஹீரோயினாக தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டது. ஆனால் இப்போது வேறு ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூரை இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூர் ஏற்கனவே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











