'என் உயிருக்கு ஆபத்து'... ஏ.எம்.ரத்தினம் மீது ஜாகுவார் தங்கம் போலீசில் புகார்!
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம் புகார் அளித்துள்ளார்.
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று ஜாகுவார் தங்கம் தலைவர் பதவியை ஏற்றார். ஆனால் அவரது அணியைச் சேர்ந்த மற்றவர்கள் வெற்றி பெறவில்லை. இதனால் ஜாகுவார் தங்கத்துக்கு, மற்ற பதவிகளில் இருக்கும் அவரது எதிரணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தங்களை செயல்படவிடாமல், வெளியாட்களை வைத்து ஜாகுவார் தங்கம் மிரட்டுவதாக துணை தலைவர் ஏ.எம்.ரத்தினம் போலீசில் நேற்று புகார் அளித்தார். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஜாகுவார் தங்கம், எதிரணியினர் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். ஆனால் என்னை துரைசாமி , ஜம்பு, நந்த கோபால் செட்டி மற்றும் ஏ.எம்.ரத்தினம் ஆகியோர் சங்கத்தின் பணி செய்ய விடாமலும், சங்கத்தை பூட்டியும் , சங்கத்தில் உள்ள CCTV கேமராக்களை அகற்றுமாறும் மிரட்டுகிறார்கள்.
மேலும் என் உயிருக்கும் ஆபத்து இருக்கிறது எனவே கமிஷ்னர் அலுவலக்தில் இவர்கள் 4 பேர் மீதும் புகார் கொடுத்துள்ளேன்" என அவர் கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் என்பது தமிழ் சினிமாவில் உள்ள மிகவும் பழமையான சங்கம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை ஒப்பிடுகையில், இதில் உறுப்பினராக சேர்வதற்கும், படத்தின் தலைப்புகளை வசூலிப்பதற்கும் குறைந்த அளவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆனால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது, எந்தெந்த தலைப்புகள் கில்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை சங்க நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்காமல் மூடி மறைப்பதே பிரச்சினைக்கு காரணம். இதனால் ஒரு சில ஆண்டுகள் தேர்தல் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











