அப்பா விஜய் பண்ணாத 2 விஷயத்தையும் செய்யும் மகன் ஜேசன் சஞ்சய்.. முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பாரா?
சென்னை: தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கொடைக்கானலில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், அடுத்ததாக சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கவுண்டமணியின் மனைவி சாந்தி மறைவுக்கும் நேரில் சென்று கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினார். நடிகர் விஜய் ஜன நாயகன் படத்துக்காக அதிகபட்சமாக 250 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், இதுவரை தனது பெயரில் சொந்தமாக எந்தவொரு படத் தயாரிப்பு நிறுவனத்தையும் அவர் தொடங்கவில்லை. மேலும், எம்ஜிஆர் போலவும் தனது தந்தை போலவும் இயக்குநராகவும் அவர் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில், இந்த இரண்டு விஷயங்களையும் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்திலேயே செய்து வருவது தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இயக்குநராக அறிமுகம்: லைகா தயாரிப்பில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஜேசன் சஞ்சய் இயக்கி வருவதாக அறிவிப்பு வெளியானது. மேலும், சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியான மேக்கிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஜேசன் சஞ்சய் ஹீரோவாகவே அறிமுகம் ஆகியிருக்கலாம் என்றும் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இளம் நடிகர் கிடைத்திருப்பார் என்றும் கூறி வருகின்றனர். இந்த ஆண்டு தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. மேலும், இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்தும் விரைவில் ஹீரோவாகப் போகிறார் என்கின்றனர். அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியும் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
தயாரிப்பு கம்பெனியும் தொடங்கிட்டாரு: லைகா தயாரிப்பில் தான் இந்த படம் உருவாகி வருகிறது என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்று வெளியான வீடியோவில் JSJ என இன்னொரு தயாரிப்பு நிறுவனமும் தனது முதல் படத்தை இணைந்து தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். ஜேசன் சஞ்சய் ஜோசப் விஜய் தான் அதன் முழுப்பெயர் என்றும் விளக்கம் கொடுத்து வருகின்றனர். ஜேசன் சஞ்சய் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் லைகாவுக்கு படம் பண்ணுகிறார் என்றும் இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார் என்கின்றனர்.

அப்பா விஜய் செய்யாத இரண்டு விஷயத்தையும்: நடிகர் விஜய் 69 படங்கள் ஹீரோவாக நடித்தும் இதுவரை ஒரு படத்தைக் கூட இயக்கவோ, தயாரிக்கவோ இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஹீரோவாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் மாறி பல இளம் இயக்குநர்களை பெரிய இயக்குநர்களாக மாற்றியவர். விஜய்யின் அட்மினாக இருந்த ஜெகதீஷ் பழனிச்சாமி சமீபத்தில் தி ரூட் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்து வருகிறார். அப்பா செய்யாத இரண்டு விஷயங்களையும் சினிமாவில் மகன் ஜேசன் சஞ்சய் செய்து வருவதை அறிந்து கோடம்பாக்கத்தில் பரபரப்பான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இரண்டிலும் அவர் வெற்றி பெறுவார் என வாழ்த்தி வருகின்றனர்.
இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் வருவாரா?: ஜேசன் சஞ்சய் இதுவரை தனது தந்தையின் நிழலில் தனது முதல் படத்தை பண்ண வேண்டும் என நினைக்கவில்லை. தொடர்ந்து தனியாகவே முயற்சித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் படத்தின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு விஜய் வருவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. கூடிய சீக்கிரத்தில் படம் ரிலீஸுக்கு ரெடியானதும் அதுதொடர்பான தகவல்கள் வெளியாகும்.


Click it and Unblock the Notifications











