கத்தியை வாங்கியது ஜெயா டிவி.. இசை வெளியீடும் ஜெயா டிவிதான்!
லைகா நிறுவனம் தயாரிக்கும் விஜய்யின் கத்தி படத்தின் தொலைக்காட்சி உரிமையை வாங்கியுள்ளது ஜெயா டிவி.
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ஆரம்பத்திலிருந்தே பெரும் சர்ச்சைக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகி வந்தது.
65 தமிழ் அமைப்புகள் முதலில் இந்தப் படத்தை எதிர்த்தன. சில தினங்களில் அது 150 அமைப்புகளாக மாறியது. இனப்படுகொலையாளன் ராஜபக்சேயின் தொழில் கூட்டாளி லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தை எக்காரணம் கொண்டும் வெளியாக விடமாட்டோம் என வரிந்து கட்டினர்.
இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டை சென்னையில் நடத்துவதாக அறிவித்தனர் லைகா நிறுவனத்தினர். இதை எதிர்த்து பெரும் போராட்டத்தை தமிழ் அமைப்புகளும், மாணவர் அமைப்புகளும் அறிவித்திருந்தன.
இப்போது படத்தையே ஜெயா டிவி வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, இன்று நடக்கும் இசை வெளியீட்டு விழாவை ஒளிபரப்பும் உரிமையும் ஜெயா தொலைக்காட்சிக்கே தரப்பட்டுள்ளது.
கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என போலீசில் புகார்கள், நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசே படத்தைத் தடுத்து நிறுத்தும் என போராட்டக்காரர்கள் நம்பிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல், ஆளுங்கட்சியின் சேனலே படத்தை வாங்கியிருப்பது அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications












