காப்புரிமை என்பது காசுக்கு மட்டுமல்ல.. கமல் தொடங்கி வைத்த படத்துக்கு ஜெயகாந்தன் வாரிசுகள் எதிர்ப்பு
சென்னை: உலக நாயகன் கமல் தலைமையில் சமீபத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், மணிகண்டன், நாசர், கே.எஸ். ரவிகுமார், ரித்விகா, பானுப்பிரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் தலைப்புக்கு எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழ் திரையுலகில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

கமல் ஆதரவு
ஓ மை கடவுளே, தீனி என தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார் நடிகர் அசோக் செல்வன். அவர் லீடு ரோலில் நடித்துள்ள சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் டிரைலரை கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13ம் தேதி வெளியிட்டார். டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவிலும் கமல் கலந்து கொண்டு முழு ஆதரவை கொடுத்தார்.

சில நேரங்களில் சில மனிதர்கள்
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், 'ஜெய்பீம்' மணிகண்டன், 'கடாரம் கொண்டான்' அபி ஹாசன், 'அன்பிற்கினியாள்' பிரவீன் ராஜா, நாசர், கே.எஸ். ரவிக்குமார், ரித்விகா, ரேயா, அஞ்சு குரியன், பானுப்பிரியா, இளவரசு, என ஏகப்பட்ட பவர் ஹவுஸ் பர்ஃபார்மர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஜெயகாந்தன் நாவல்
மறைந்த பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் தமிழ் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நாவல். 1977ம் ஆண்டு இயக்குநர் பீம் சிங் இந்த தலைப்பை பயன்படுத்தி சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கினார். நாகேஷ், ஸ்ரீகாந்த், லக்ஷ்மி, சுகுமாரி உள்ளிட்ட பல பிரபலங்கள் அந்த படத்தில் நடித்து இருந்தனர்.

அதே தலைப்பு வேண்டாம்
சில நேரங்களில் சில மனிதர்கள் எனும் தலைப்பில் மீண்டும் ஒரு புதிய படம் உருவாகி உள்ள நிலையில், எழுத்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் அந்த தலைப்பை மாற்ற வேண்டும் என கமல்ஹாசனுக்கு கோரிக்கை வைத்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

வாரிசுகள் எதிர்ப்பு
இந்த விவகாரம் தொடர்பாக, ஜெயகாந்தனின் மகளான தீபலட்சுமி தனது முகநூல் பக்கத்தில் நீண்ட கோரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

மதிப்புக்குரிய கமல்ஹாசனுக்கு,
ஜெயகாந்தனின் புதல்வர்கள் ஜெ.காதம்பரி, ஜெ.ஜெயசிம்மன், ஜெ.தீபலட்சுமி ஆகியோர் எழுதுவது. தமிழ் இலக்கிய உலகில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' ஒரு மைல்கல். சனாதனம் அதுவரை எழுதி வைத்திருந்த விதியை, பழக்கி வைத்திருந்த சமூகத்தை கேள்வி கேட்டு புதிய பார்வையையும், வெளிச்சத்தையும் தந்த 'அக்கினிப் பிரவேசம்' சிறுகதையின் தொடராக எழுந்த நாவல் அது. தமிழ்ச் சமூகத்தில் பெரும் விவாதங்களையும், உரையாடல்களையும் எழுப்பிய கதை அது.
அதன் தனித்துவத்தைப் போற்றுவதும், காப்பாற்றுவதும் தமிழ் இலக்கிய உலகின் பொறுப்பும், கடமையும் ஆகும் என நினைக்கிறோம். எழுத்தாளர் ஜெயகாந்தனையும், அவரது எழுத்துகளையும் உண்மையாக மதிப்பவர்களும், நேசிப்பவர்களும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எனும் தலைப்பை வேறொரு கதைக்கோ, சினிமாவுக்கோ தலைப்பாக மீண்டும் பயன்படுத்த மாட்டார்கள் என நம்புகிறோம்.

மனம் ஒப்பவில்லை
மேலும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்பது ஒரு பழைய திரைப்படத்தின் தலைப்பு மட்டுமல்ல. இலக்கிய வாசகர்களாக இல்லாதவர்களுக்கும் கூட ஜெயகாந்தன் என்ற பெயரும் அதன் தொடர்ச்சியாய்ச் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற சொற்றொடரும் பிரிக்க இயலாதபடி நினைவில் பதிந்து போனவை. அதனாலும் வேறு எந்தப் படைப்புக்கும் அத்தலைப்பைப் பொருத்திப் பார்க்க மனம் ஒப்பவில்லை.

அப்பாவே சொன்னாலும்
"இல்லாதவர்கள் பாவம், எடுத்துக் கொள்கிறார்கள்"
அவர் கதையையோ, பாத்திரப் படைப்பையோ யாராவது அவர் அனுமதியின்றித் திரைப்படங்களில் பயன்படுத்தி விட்டதாகத் தெரியவரும் போது அப்பா இப்படித்தான் பெருந்தன்மையோடு சொல்வார். அவரே சம்மதித்தாலும் நாம் அதைச் செய்யலாமா என்பது தான் இங்கு தார்மீக ரீதியாக எழும் கேள்வி.

கமலுக்கு கேள்வி
2009ல் அப்பாவின் சம்மதத்தைப் பெற்றுத் தான் 'உன்னைப் போல் ஒருவன்' தலைப்பை எடுத்துக் கொண்டீர்கள் என்பதை அறிவோம். ஆனால் அதன் விளைவாக இன்று இணையதளத்தில் 1965-ல் வெளியாகி தேசிய விருது, பெருந்தலைவர் காமராஜரால் பாராட்டு, அன்றைய சோவியத் யூனியனில் திரையிடல் போன்ற பல சிறப்புகளைப் பெற்ற ஜெயகாந்தனின் 'உன்னைப் போல் ஒருவன்' குறித்த அனைத்துத் தடயங்களும் 2009 திரைப்படத்தின் டிஜிட்டல் சுவடுகளால் மறைக்கப்பட்டுவிட்டன என்பதை நீங்கள் அறிவீர்களா?
அதே நிலை சாகித்ய அகாடமியின் விருது பெற்ற, நடிகை லட்சுமிக்கு ஊர்வசி விருது பெற்றுத் தந்த, இன்றளவும் பலரால் பேசப்பட்டு விரும்பி ரசிக்கப்படுகிற ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலுக்கும் திரைப்படத்துக்கும் ஏற்படக் கூடாது என்று நாங்கள் உறுதியோடு இருக்கிறோம்.

காப்புரிமை பொருள் ஈட்ட அல்ல
காப்புரிமை என்பது பொருள் ஈட்டுவதற்காகக் கொடுக்கப்பட்ட உரிமை அல்ல. சொல்லப் போனால் அது இரண்டாம் பட்சமானது. காப்புரிமை என்பது படைப்பாளியின் படைப்புகளையோ அதன் தலைப்புகளையோ வேறொருவர் எடுத்துத் திரித்து வெளியிடுவதைத் தடுத்துக் காப்பது.
ஜெயகாந்தனின் மக்களான எங்களிடம் அந்த உரிமை இருக்கும் வரை இம்மாதிரியான செயல்களைச் சுட்டிக்காட்டி அவை நடைபெறா வண்ணம் தடுப்பதும் எங்கள் கடமையாகிறது.

தயவு செய்து மாற்றுங்கள்
ஆகவே, தங்கள் முன்னிலையில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்துக்கு 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற தலைப்பைத் தயவுசெய்து மாற்றி வேறு தலைப்பு வைக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். ஜூலை மாதம் அதன் அறிவிப்பு வந்தவுடனேயே இதற்கான எதிர்ப்பை எழுத்தாளர்கள் பிரபு தர்மராஜ், மலர்வண்ணன், பத்திரிகையாளர் கவின்மலர் உட்படப் பலரும் தெரிவித்திருந்தனர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
அப்பாவின் நல்ல நண்பர் என்பது மட்டுமல்லாது உலக நாயகன் என்று புகழப்படுகிற சிறந்த கலைஞர் என்ற முறையிலும் நீங்கள் எங்களது இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இப்படிக்கு,
ஜெ. காதம்பரி
ஜெ. ஜெயசிம்மன்
ஜெ. தீபலட்சுமி
என எழுந்தாளர் ஜெயகாந்தனின் வாரிசுகள் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











