அன் கான்ஷியஸ்ல போனாங்க.. அம்மா ஒரு அறை விட்டாங்க.. மனைவி பற்றி ஓபனாக பேசிய ஜெயம் ரவி
சென்னை: கோலிவுட்டின் முக்கியமான நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் பிரியப்போவதாக கடந்த சில காலமாகவே ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. சூழல் இப்படி இருக்க தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். அவரது இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே பெரும் ஷாக்கை கொடுத்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்தவர் ஜெயம் ரவி. தான் உண்டு, தனது குடும்பம் உண்டு, வேலை உண்டு என்று இருப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. அவரது மாமியார் தயாரித்திருந்த அந்தப் படம் முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் கடந்து சென்றது. பெரிய ஹிட் இல்லாவிட்டாலும்; நஷ்டம் எதுவும் இல்லை என்ற நிம்மதியோடு இருந்தார்கள் ஜெயம் ரவியும், அவரது மாமியாரும்.

ஆர்த்தியுடன் பிரச்னை: சூழல் இப்படி இருக்க கடந்த சில காலமாகவே ஒரு பிரச்னை பேசப்பட்டது. அதாவது ஜெயம் ரவிக்கும் அவரது மனைவி ஆர்த்திக்கும் வாக்குவாதமாக ஆரம்பித்த மனஸ்தாபம் இப்போதும் பெரும் சண்டையில் வந்து நிற்கிறது என்றும்; கூடிய சீக்கிரமே இரண்டு பேரும் விவாகரத்து முடிவை அறிவிக்கவிருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியது. அதனை ஜெயம் ரவி இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ரவியின் அறிக்கை: இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், " வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையில்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே. நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன். எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்,.
ரவி - ஆர்த்தி பேட்டி: இந்நிலையில் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் கொடுத்த பேட்டி திடீரென ட்ரெண்டாகியுள்ளது. தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனது அப்பா - அம்மா போன்றுதான் எங்களது திருமண வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். 80 சதவீதம்தான் ரவியால் இருக்க முடிகிறது என்று எனது அப்பாவிடம் சொன்னேன். அதற்கு அவர், எனது வயதில் 100 சதவீதம் வந்துவிடுவார் என்று சொன்னார் என தெரிவித்தார்.
அறை விட்ட அம்மா: ஆர்த்தி அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட ரவி, 'ஆர்த்திக்கு சிசேரியன். அப்போது நானும் அறுவை சிகிச்சை அறையில் இருந்தேன். அவர் அன் கான்ஷியஸுக்கு கொஞ்சம் கொஞ்சமாக செல்ல ஆரம்பித்தார். அவர்கள் செய்வதை பார்த்து எனக்கு மயக்கம் வந்துவிட்டது. நான் கீழே விழுந்துவிட்டேன். உடனே எனது அம்மா என்னை பளார் பளார் என்று அறை விட்டு உனக்கு என்னடா ஆச்சு என்று கேட்டு என்னை எழுப்பிவிட்டார்' என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், எப்படி காதலோடும், ஜாலியாக இருந்திருக்கிறார்கள். இப்படி விவாகரத்து செய்துகொண்டார்களே என்று உச் கொட்டுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











