எந்த நம்பிக்கையில் இந்தப் படம் எடுத்திருக்கோம் தெரியுமா? - ஜெயம் ரவி
Recommended Video

சென்னை: ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையில்தான் டிக் டிக் டிக் என்ற விண்வெளிக் கதையை படமாக எடுத்துள்ளோம் என்று ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் 'டிக் டிக் டிக்' இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், வின்சென்ட் அசோகன், ரமேஷ் திலக், ரித்திகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டி இமான் இசையமைத்திருக்கிறார். இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த படம் 100 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து நடிகர் ஜெயம் ரவி பேசுகையில், "முதலில் நான் ஸ்பேஸ் திரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் மிருதன் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை. இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கபோகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.
பிறகு நல்லபடம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

அதே போல் இந்த படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் இப்படத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்க வைத்தது. அரங்கத்தின் அமைப்பே நான் உள்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பை எளிதாக்கியது. ஏனெனில் ஸ்பேஸ் திரில்லர் என்று சொன்னவுடன் நடிகர்களுக்கு நடிக்கும் போது தயக்கம் இருக்கும். குழப்பம் இருக்கும். கேள்வி இருக்கும். ஆனால் இந்தப் படத்திற்காக போடப்பட்ட அரங்கத்தில் உண்மையான விண்வெளி ஆய்வகத்திற்கான உள்ளரங்க அமைப்பு டீடெயிலாக இடம்பெற்றிருந்தது. இதற்காக கலை இயக்குநரை மனதாக பாராட்டலாம்.
இந்த படம் இரண்டு மணி நேரம் பத்து நிமிட அளவிற்கு அற்புதமாக படத்தை எடிட் செய்திருக்கிறார் எடிட்டர். இதற்காக அவருக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்.

இந்தப் படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறான். அவனிடம் ஒரு நாள் இயக்குநர் இது போல் ஒரு கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என கேட்டார் என்று சொன்னேன். ம் நடிக்கலாம் என்றான். அதற்கு டான்ஸ் தெரியவேண்டும் என்றேன். கத்துக்கலாம் என்றான். அவனுடைய இந்த ஆட்டிடியுட் படக் குழுவினரைக் கவர்ந்தது. அதனால் அறிமுகமாகியிருக்கிறேன். அவருக்கு உங்களின் ஆதரவை வழங்குமாறு தந்தையாகவும், சக கலைஞராகவும் கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











