மகன் கேட்ட அந்த கேள்வி.. என்னால் அதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.. மேடையில் ஓபனாக பேசிய ஜெயம் ரவி
சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் பிரதர். விவாகரத்து சர்ச்சை ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் இன்று நடந்த பிரதர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் ரவி. எப்போதும் போல் உற்சாகமாக காணப்பட்ட அவர்; செய்தியாளர்களை சந்தித்து விவாகரத்து குறித்த விளக்கத்தையும் கொடுத்தார். இந்தச் சூழலில் பிரதர் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட ஜெயம் ரவி பேசுகையில், 'இந்த விழாவுக்கு வந்திருக்கும் எனது ஒவ்வொரு பிரதருக்கும் வணக்கம். நீங்கள் கொடுக்கும் எனர்ஜியால்தான் நம்ம வண்டி ஓடிக்கொண்டிருக்கிரது. விழா முடியும் நிலையில் நான் வந்தாலும் ஆரம்பத்தில் என்ன எனர்ஜி கொடுத்தீர்களோ அதே எனர்ஜியை கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். என்னுடைய முதல் படத்துக்கு நீங்கள் கொடுத்த எனர்ஜி போல் என்னுடைய கடைசி படம் வரைக்கும் கொடுப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.

வயது ஆகிவிட்டதா: இந்தப் படத்தின் ஒரு பாடலில் முட்டி ஸ்டெப்பை முதலில் போட முடியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த எனது மகன் ஆரவ், என்னப்பா வயதாகிவிட்டதா என்று கேட்டுவிட்டான். அதை தாங்கவே முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அதே ஸ்டெப்பை ஒழுங்காக போட்டுவிட்டேன். அதை பார்த்து நீங்க செஞ்சிட்டீங்களே என்று சொல்லிவிட்டு சென்றான்.
என்னுடைய முதல் வேலை: என்னுடைய முதல் படத்திலிருந்து உங்களை சந்தோஷப்படுத்துவதைத்தான் எனது முதல் வேலையாக செய்துகொண்டிருக்கிறேன். அந்த சப்போர்ட்டுக்கு நன்றி. ராஜேஷ் உண்மையிலேயே எனக்கு பிரதர்தான். நான் தான் இந்த டைட்டிலை கொடுத்தேன். என்னவெல்லாமோ யோசித்து பார்த்தோம்.குடும்ப பாங்கான படம் இது. எல்லோரும் எல்லோரையும் பிரதர் என்றுதான் கூப்பிட்டுக்கொள்வோம். நான் சொன்ன டைட்டிலுக்கு இயக்குநரின் டீமும் ஓகே சொல்லிவிட்டது.
அழகான ஸ்டோரி: இந்தப் படம் அக்காவுக்கும் தம்பிக்குமிடையே நடக்கும் அழகான கதை. எனக்கு அக்காவாக நடித்திருப்பது பூமியைவிட அழகாக இருக்கும் நம் பூமிகாதான். பல வருடங்களாக அவரை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அழுக்காகாத முகம் அவருடைய முகம். எப்போதுமே அந்தப் புன்னகையும், அழகும் இருக்கும். எனது நண்பர்களிடம் பூமிகாதான் எனக்கு அக்காவாக நடிக்கிறார் என்று சொன்னதும்; யாரு அக்கா அவங்களா என்று கத்தினார்கள்.
இதேமாதிரிதான்: இதேபோன்றுதான் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நதியா மேடம் எனக்கு அம்மாவாக நடிக்கப்போகிறார் என்று சொன்னதும் கத்தினார்கள். இந்தப் படத்தில் பூமிகாவின் நடிப்பு அபாரமாக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் நிறைய பேசிக்கொள்வோம். அவரால் எனக்கு நிறைய அறிவு கிடைத்தது. அதற்காக அவருக்கு நன்றிகளை சொல்லிக்கொள்கிறேன். எனது ஃபேமிலியில் ஒருவர்தான் ராஜேஷ். அவர் இரண்டு, மூன்று தடவை கதை சொல்லியிருக்கிறார். அப்போ அவரிடம், சார் எனக்கு ஃபேமில் எண்ட்டெர்டெயினராக இருக்க வேண்டும் என்று சொன்னேன். முழு காமெடி படமாக வேண்டாம் என்று சொன்னேன். அப்போதுதான் பிரதர் ஒன்லைனை சொன்னார். இந்தப் படம் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் வரிசையில் இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











