மனோஜ் போய்ட்டார்.. பாரதிராஜா அதற்கு அடிமை ஆகிட்டாரு.. கலங்கியபடி பேசிய சகோதரர்
சென்னை: மனோஜின் உயிரிழப்பு அவரது தந்தையும், இயக்குநருமான பாரதிராஜாவுக்கு பேரிழப்பாக அமைந்திருக்கிறது. நடிகராக வேண்டும் என்ற தன்னுடைய ஆசை நிறைவேறாததால் தனது மகனை நடிகராக்கினார். ஆனால் பாரதியால் அறிமுகப்படுத்தப்பட்ட பலரும் வென்றது போல் மனோஜால் வெல்ல முடியவில்லை. நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் பாரதிராஜா குறித்து அவரது சகோதரர் பேசியிருக்கும் விஷயம் பலரையும் கலங்க வைத்திருக்கிறது.
பாரதிராஜாவின் மகனான மனோஜ் தாஜ் மஹால் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி முதல் படத்திலேயே தோல்வியை சந்தித்தார். அடுத்தடுத்த படங்களில் கண்டிப்பாக வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பல படங்களில் நடித்தார். ஆனால் ஒன்றிரண்டு படங்கள் தவிர்த்து அவருக்கு பெயர் எதுவும் கிடைக்கவில்லை. தனது தந்தையால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்கள், நடிகைகள் ஜொலித்துக்கொண்டிருக்க தன்னால் ஜொலிக்க முடியவில்லையே என்கிற அழுத்தம் அவருக்கு நீண்ட காலமாகவே இருந்திருக்கிறது.
இயக்குநரான மனோஜ்: நடிகராகித்தான் தனது தந்தையின் புகழையும் காப்பாற்ற முடியவில்லை இயக்குநராக ஜொலிக்கலாம் என்று முடிவெடுத்தார். எனவே ஷங்கர், மணிரத்னம் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த அனுபவத்தை கொண்டு மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்துக்கு சுசீந்திரன் கதை எழுதியிருந்தார். பாரதிராஜா முக்கியமான கேரக்டரில் அந்தப் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்தப் படமும் தோல்வியடைந்ததால் மனோஜ் தீவிரமான மன அழுத்தத்துக்கு சென்றுவிட்டார். இருப்பினும் எப்படியாவது சினிமாவில் வென்று தனது தந்தையின் நீட்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவில் அயராது உழைப்பதற்கு தயாராகவே இருந்தார்.

இதய அறுவை சிகிச்சை: மார்கழி திங்கள் படத்தின்போதே அவரது உடல்நிலையில் சில கோளாறுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் ஷூட்டிங் காரணமாக அதை பெரிதாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய அவர் வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுத்து வந்தார். இதற்கிடையே சாதூரியன் படத்தில் நடித்தபோது உடன் நடித்த நந்தனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
உயிரிழந்த மனோஜ்: பூரணமாக உடல்நலம் தேறிவிட்டார் என்றுதான் அவரது குடும்பத்தினர் நினைத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் அண்மையில் அவருக்கு மீண்டும் நெஞ்சு வலி வந்தது. இதன் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார். மனோஜின் உயிரிழப்பு அந்தக் குடும்பத்தை நிலைகுலைய செய்திருக்கிறது. முக்கியமாக பாரதிராஜாவை எப்படியாவது இதிலிருந்து தேற்றிவிட வேண்டும் என்று கங்கை அமரன் உள்ளிட்டோர் தங்களால் முடிந்ததை தொடர்ந்து செய்துவருகிறார்கள். இந்நிலையில் பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கொடுத்திருக்கும் பேட்டி பலரையும் கலங்க வைத்திருக்கிறது.
ஜெயராஜ் பேட்டி: அவர் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பாரதிராஜாவை மனோஜ் ரொம்பவே நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால் அவர் போன பிறகு அந்த இடத்திலிருந்து யார் அண்ணனை பார்த்துக்கொள்வார் என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும் நாங்கள் எல்லாம் இருக்கிறோம். அண்ணி, மருமகள், குழந்தைகள் என எல்லோரும் இருக்கிறோம். மனோஜின் குழந்தைகள் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார். நேற்றுகூட காலையிலிருந்து அவர் சாப்பிடவில்லை. குழந்தைகள் சாப்பாட்டை எடுத்து சென்று ஊட்டிவிட்டதும் சாப்பிட்டார். இப்போது அவர் அதுகளுக்கு அடிமையாகியிருக்கிறார். தன்னால் யாருக்கும் எந்த தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்று நினைத்துதான் கடற்கரை பங்களாவில் பாரதிராஜா தனிமையில் இருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











