ஷூட்டிங்கில் திடீர் விபத்து.. சர்ரென இழுத்துச் சென்ற வாகனம்.. அதிர்ஷ்டவசமாக தப்பிய பிரபல ஹீரோ!
கொச்சி: படப்பிடிப்பில் நடந்த விபத்தில் பிரபல நடிகர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பி இருக்கிறார்.
மலையாள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் ஜெய சூர்யா. துணை நடிகராக வாழ்க்கையை தொடங்கி ஹீரோவானவர் இவர்.
சில படங்களை தயாரித்தும் இருக்கிறார். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
தமிழில், வினயன் இயக்கிய என் மன வானில், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், மனதோடு மழைகாலம், சக்கரவியூகம் ஆகிய படங்களில் நடித்துள்ள ஜெய சூர்யா, வெள்ளம் என்ற மலையாள படத்தில் இப்போது நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக, சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.

எஸ்கேப் ஆனார்
இந்தப் படத்தை பிரஜேசன் இயக்குகிறார். சித்திக், பைஜு, இடைவேளை பாபு, ஶ்ரீலட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர். இதில் குடிகாரனாக நடிக்கிறார் ஜெயசூர்யா. சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த விபத்தில், எஸ்கேப் ஆகியிருக்கிறார் அவர்.

டில்லர் வாகனம்
அதாவது கதைப்படி பவர் டில்லர் வாகனத்தை இயக்கியபடி அவர் நடந்து வர வேண்டும். இதற்காக அவரிடம் ஒரு டில்லர் வாகனம் கொடுக்கப்பட்டது. படக்குழு அதைத் தூரத்தில் இருந்து காட்சிப்படுத்திக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த வாகனம் கட்டுப்பாட்டை மீறி அவரை ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்றது.

காயமின்றி தப்பினார்
இதைக் கண்ட படக்குழுவினர் ஓடிச்சென்று ஜெயசூர்யாவை பிடித்து இழுத்தனர். வாகனம் விழ இருந்த இடம் பெரிய பள்ளம் என்பதால், படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார், அவர். இந்த வீடியோவை படக்குழுவினர் இப்போது வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











