ஆமா...அது உண்மைதாங்க... த்ரிஷா விஷயத்தை உறுதி செய்த டைரக்டர்!
சென்னை: த்ரிஷ்யம் படத்தை அடுத்து மோகன்லாலை மீண்டும் இயக்கும் ஜீத்து ஜோசப், இந்தப் படத்தில் த்ரிஷா நடிப்பதை உறுதி செய்தார்.
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் மலையாளத்தில் இயக்கிய த்ரிஷியம் 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்தி, தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தை ஜீத்து ஜோசப்பே இயக்கினார்.

மலையாளத்தில் மோகன் லால் நடித்திருந்த கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார். கவுதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ், கலாபவன் மணி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் தமிழிலும் ஹிட்டானது.
இதையடுத்து மலையாளத்தில் சில படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார். கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல் உட்பட பலர் நடித்துள்ள தம்பி படத்தை தமிழில் இயக்கி உள்ளார். இந்தப் படம் வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதற்கிடையே த்ரிஷியம் ஹீரோ மோகன்லாலை அவர் மீண்டும் இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி ஜீத்து ஜோசப்பிடம் கேட்டபோது அது உண்மைதான் என்றார். சில உண்மை சம்பவங்களில் அடிப்படையிலான ஆக்ஷன் த்ரில்லர் படம் அது. பெரிய பட்ஜெட் படம். இந்தியா மட்டுமில்லாமல் சில நாடுகளில் நடக்கும் கதை என்றார்.
இதில் மோகன்லால் மனைவியாக த்ரிஷா நடிப்பதாகக் கூறப்பட்டது பற்றி கேட்டதற்கு அது, உண்மைதான். கதையை கேட்டதும் அவர் ஒப்புக்கொண்டார் என்றார்.


Click it and Unblock the Notifications











