அலறிய ஜான்வி கபூர்.. அத்துமீறியவரை அலேக்காக தூக்கி வீசிய ராம்சரணின் பாடிகார்ட்.. யாருப்பா நீ?
ஹைதராபாத்: சினிமா பிரபலங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது சாதாரண காரியமல்ல. நட்சத்திரங்களின் பாதுகாவலர்களும் எப்போதும் பேசப்படுவதுண்டு. சல்மான் கானின் பாதுகாவலர் ஷேரா, முதலமைச்சர் விஜய்யின் நயீம் மூசா போலவே, தற்போது டோலிவுட் நடிகர் ராம் சரணின் பாதுகாவலர் கெவின் குண்டாவும் செய்திகளில் இடம் பிடித்துள்ளார். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அத்துமீறிய நபரை அலேக்காக அவர் தூக்கிச் சென்ற காட்சி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடந்த 'பெத்தி' திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியின்போது, ஒரு ரசிகர் பாதுகாப்பு வளையத்தை மீறி ராம் சரணை சந்திக்க முயன்றார். மேடையில் பல பிரபலங்கள் இருந்த நிலையில், நடிகை ஜான்வி கபூர் சற்று பதற்றமடைந்து பயந்தார். அப்போது ராம் சரணின் பாதுகாவலர் கெவின், மின்னல் வேகத்தில் அந்த ரசிகரை மடக்கிப் பிடித்து அலேக்காக தூக்கிச் சென்ற காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து, இந்தக் கட்டுமஸ்தான பாதுகாவலர் யார், அவரது சம்பளம் எவ்வளவு என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இவரை ஒரு ஹாலிவுட் நடிகர் அல்லது ஒரு தொழில்முறை மல்யுத்த வீரர் என முதலில் பலரும் நினைத்தது குறிப்பிடத்தக்கது.
ராம் சரணின் தனிப்பட்ட பாதுகாவலரான இவரின் பெயர் கெவின் குண்டா. இவரது உண்மையான பெயர் அப்து சோவ் (Abdu Sowe) ஆகும். ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டைச் சேர்ந்த இவர் தற்போது இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வசிக்கிறார். கெவின் ஒரு சர்வதேச அளவில் புகழ்பெற்ற தொழில்முறை எம்.எம்.ஏ (கலப்பு தற்காப்புக் கலை) வீரர் ஆவார்.
எந்தவொரு அவசர அல்லது ஆபத்தான சூழ்நிலையையும் சில நொடிகளில் கட்டுக்குள் கொண்டு வரும் திறமை இவருக்குண்டு. இவரின் உடல் வலிமையும், தற்காப்பு கலைத் திறன்களும் ஆபத்தான தருணங்களில் விரைவாக செயல்பட உதவுகின்றன. இத்தகைய தேர்ந்த பாதுகாவலரைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியது.
பாலிவுட்டில் சல்மான் கானின் பாதுகாவலர் ஷேரா அதிக சம்பளம் வாங்குபவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஆனால், கெவின் குன்டோவின் சம்பளம் குறித்த ஊடகச் செய்திகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. சில தகவல்களின்படி, ராம் சரண் இவருக்கு ஒரு நாளைக்கு சுமார் ₹4 லட்சம் வரை சம்பளம் வழங்குவதாகக் கூறப்படுகிறது.
இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கெவின் இந்தியாவின் மிக விலையுயர்ந்த பிரபல பாதுகாவலராக மாறுவார். இத்தகைய பெரிய தொகை, அவரது சர்வதேசப் பயிற்சி மற்றும் தற்காப்பு கலை திறன்களுக்குக் கொடுக்கப்படும் மதிப்பைக் காட்டுகிறது. இதனால் அவரது புகழ் மேலும் அதிகரித்துள்ளது.
கெவினின் அதிகரித்து வரும் இந்தப் புகழ் குறித்து ஒரு நேர்காணலில் ராம் சரணிடம் கேட்கப்பட்டபோது, அவர் சிரித்தபடியே, "நீங்கள் அனைவரும் அவரை மிகவும் பிரபலமாக்கிவிட்டீர்கள். இப்போது நான் அவரை வெளியே போக அனுமதிப்பதில்லை. ஏனெனில், மக்கள் அவருக்கு சாக்லேட்டுகள் அல்லது பிஸ்கட்டுகளுக்கு லஞ்சம் கொடுத்து என்னைப் பற்றிய விஷயங்களைப் பெற முயல்வார்களோ என்று நான் பயப்படுகிறேன்!" என்று வேடிக்கையாகக் கூறினார்.
கடந்த நான்கு வருடங்களாக கெவின் தனது குடும்பத்தின் பாதுகாப்பை கவனித்து வருவதாகவும் ராம் சரண் குறிப்பிட்டார். சமீபத்திய நிகழ்ச்சியில், ஜான்வி கபூர் மற்றும் ராம் சரண் ஆகியோரை நெருங்க முயன்ற ரசிகரை கெவின் அலேக்காக தூக்கிச்சென்று அப்புறப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய பாதுகாவலர்களுக்குப் பதிலாக, ஒரு சர்வதேச அளவில் பயிற்சி பெற்ற தற்காப்புக் கலை வீரரைத் தேர்ந்தெடுத்த ராம் சரணின் முடிவை சினிமா வட்டாரங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
முதலில் பெத்தி படத்தில் ராம்சரண் உடன் மல்யுத்தம் செய்யும் ஹாலிவுட் நடிகர் என்றே பலரும் நினைத்த நிலையில், ராம்சரணின் பர்சனல் பாடிகார்ட் தான் இவர் என்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென ஃபாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications