வசூல் வேட்டையாடிவரும் ஜிகர்தண்டா, பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது
சென்னை: பெரும் வெற்றி பெற்றுள்ள தமிழ் திரைப்படமான ஜிகர்தண்டா, பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளதாம். மாபெரும் வெற்றி பெற்ற 'பீட்சா' திரில் திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படம், ஜிகர்தண்டா. சிம்ஹா, சித்தார்த், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடித்த இப்படம் வெளியான நாளில் இருந்து சக்கைபோடு போட்டுவருகிறது.

கூடுதல் தியேட்டர்கள் கிடைத்தன
ரூ.10 கோடி வசூலை ஏற்கனவே தாண்டி நாலு கால் பாய்ச்சலில் படம் ஓடிக்கொண்டுள்ளது. இதனால் கூடுதல் திரையரங்குகளையும் அப்படத்துக்கு ஒதுக்கியுள்ளன தியேட்டர்கள்.

ஜாம்பவான்கள் பாராட்டு
இயக்குனர்கள் ஷங்கர், மணிரத்னம் ஆகியோர் படத்தை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள். இதனிடையே,. பாலிவுட்டின் தயாரிப்பாளர்கள் சிலர் இப்படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி வருவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கூறியுள்ளார்.

பாலிவுட் தயாரிப்பாளர்கள் போன்
ஒரு சில பாலிவுட் தயாரிப்பாளர்களிடமிருந்து தனக்கு போன் வந்ததுள்ளதாகவும், அவர்கள் இப்படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் கதிரேசன் தெரிவித்தார். இருப்பினும், இன்னும் பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படவில்லை என்றும் கதிரேசன் கூறினார்.

தெலுங்கில் டப்பிங்
தெலுங்கிலும் 'ஜிகர்தண்டா' , 'சிக்கடு தொரகடு' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே 'பீட்சா' படம் ஹிந்தியில் ரீமேக்காகி கடந்த மாதம் வெளியானது. ஆனால், படம் தோல்வியைத் தழுவியது. பொதுவாக, இந்தியில் ஹாரர் வகை படங்கள் வரவேற்பை பெறுவதில்லை என்பதால் பீட்சா தோல்வியடைந்ததில் வியப்பில்லை என்கின்றன மும்பை வட்டாரங்கள்.


Click it and Unblock the Notifications











