TTT இல் பொறுப்பற்ற வசனம்.. 41 உயிர்கள் போனது நகைச்சுவாயா?.. எப்படி இருந்த ஜீவா இப்படி மாறிட்டாரே?
சென்னை: நடிகர் ஜீவா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். முழுக்க முழுக்க ஃபேமிலி எண்டர்டெயினராக இருந்த இந்த படத்தை மலையாள இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கி இருந்தார். படத்தில் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு படக்குழு செய்த விளம்பரத்தை விட படத்தில் இருந்த ஒரு டயலாக் பெரிய விளம்பரத்தை பெற்றுக் கொடுத்தது. அந்த டயலாக், " கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடா.. கண்டிஷன்ஸ ஃபாலோ பண்ணுங்கடானு சொன்னேனே கேட்டீங்களா?" என்பதுதான்.
இந்த டயலாக் தியேட்டரில் சிரிப்பலையை தான் உருவாக்கியது. இந்த டயலாக் எங்கிருந்து வந்தது என்று பார்த்தால், அது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கரூரில் நடிகர் விஜய் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர், இதில் 9 குழந்தைகளும் அடங்குவர். இப்படியான அசாதாரண சூழல் ஏற்படவும், உடனே தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனைக்குச் சென்று, மீட்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது நெரிசலால் மக்கள் உயிரிழந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அழுது கொண்டே சொன்ன வார்த்தைகள் தான் அவை.
இந்தச் சம்பவம் நடைபெற்ற போது தவெகவினர் தொடங்கி விஜய் ரசிகர்கள் வரை பலரும் ஆளும் திமுக அரசுதான் திட்டமிட்டு இப்படி ஒரு கோரசம்பவத்தை அரங்கேறி விட்டது என்று குற்றம் சுமத்தியது. நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோவுமே அப்படித்தான் இருந்தது. தற்போது இந்த துயரச் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ செய்து வருகிறது.

தலைவர் தம்பி தலைமையில் படத்தில் நடிகர் ஜீவா இப்படியான வசனத்தை பேசியது என்பது பெருத்த ஏமாற்றத்தைத்தான் ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஜீவா ஜனரஞ்சகமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகர் மட்டும் அல்லாது, அவர் இயக்குநர்களின் நடிகர். ஒரு கதையின் ஆழத்தை புரிந்து கொண்டு நடிக்கும் திறன் கொண்ட நடிகர்களில் ஒருவர்.
அவரது திரைவாழ்க்கையில் அப்படியான படங்களை அவர் கொடுத்துள்ளார். வரும் காலங்களிலும் கொடுப்பார் என்ற நம்பிக்கை பலருக்கும் உள்ளது. இப்படி இருக்கையில் தனது படத்தில் இடம்பெற்ற அந்த வசனம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, இயக்குநர் பேசச் சொன்னார் பேசினேன் என்றும் டிரெண்டிங்காக இருந்தது பயன்படுத்திக் கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இது நகைச்சுவையா?: அரசியல்வாதிகள் பேசும் போது பயன்படுத்தும் வார்த்தைகளை கடந்த காலங்களில் பல சினிமாக்கள் வசனங்களாக இடம் பெறச் செய்துள்ளது. ஆனால், TTT இல் ஜீவா பேசிய வசனத்தை அப்படி கடந்து சென்றுவிட முடியாது. காரணம் 41 உயிர்கள் பறிபோயுள்ளது. அந்த துக்கத்தில் அமைச்சர் ஒருவர் அழுது கொண்டே சொன்ன வார்த்தைகளை நகைச்சுவைக்காக பயன்படுத்தி உள்ளது என்பது அதிர்ச்சிக்குரியதுதான். ஜீவாவுக்கு அந்த வார்த்தைகள் குறித்து தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. தெரிந்ததால் தான் டிரெண்டிங்கில் இருந்தது பயன்படுத்திக் கொண்டோம் என்று கூறுகிறார்.

கரூர் துயரம்: கற்றது தமிழ், ராம், ஈ, கோ போன்ற சமூக, அரசியல் களத்தில் பெருமளவுக்கு கவனிக்கப்பட்ட பாராட்டப்பட்ட படங்களில் நடித்த ஜீவா, அந்த படங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய வசனங்களைப் பேசிய ஜீவா, இப்போது இப்படியான வசனத்தையும் பேசியுள்ளார் என்பது ஏமாற்றமே. வசனத்தை இயக்குநர் சொன்னார் பேசினேன் என்று சொன்ன எஸ்கேபிசத்தில் தொடங்கி, டிரெண்டிங்கில் இருந்தது பயன்படுத்திக் கொண்டோம் என்பது வரை ஜீவாவின் பேச்சு அவர் அந்த 41 உயிர்கள் பறிபோனதை எப்படியாக எடுத்துக் கொண்டார் என்ற கேள்வியை எழுப்புகிறது.
சமூக பொறுப்பு: மலையாள இயக்குநர் நிதீஷ் சகாதேவ், இந்த வசனத்தை பரிந்துரைக்கும் போது கூட ஜீவாவே முன் வந்து அதை வேண்டாம் என்று தடுத்திருக்க வேண்டும். இது அந்த அமைச்சரை கிண்டல் அடிப்பதையோ, விமர்சிப்பதையோ கடந்து, 41 உயிர்களை பறிகொடுத்த அந்த சம்பவத்தை அவர் எப்படி கையாளுகிறார் என்பதைக் காட்டுவதாக இருக்கிறது என்ற விமர்சனங்கள் தொடர்ந்து வருகிறது. இது அவருக்கென இருக்கும் ரசிகர்களை, சமூக பொறுப்பில் இருந்து மடைமாற்றம் செய்வது மட்டும் இல்லாமல், ஜீவாவும் அதில் இருந்து விலகி நிற்பதாகவே காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











