வெளியாகின ஜில்லா, வீரம்... தியேட்டர்கள் முன் ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: விஜய் நடித்துள்ள ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் படங்கள் பொங்கலை முன்னிட்டு இன்றே உலகம் முழுவதும் வெளியாகின.
இரு நாயகர்களின் ரசிகர்களும் பெரும் ஆரவாரத்தோடு இந்தப் படங்களை வரவேற்று, பார்த்து மகிழ்ந்தனர்.
தமிழ் சினிமா வரலாற்றில் எந்த பொங்கல் பண்டிகையின்போதும் இல்லாத அளவுக்கு இந்த இரு படங்களையும் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
தமிழகத்தில் இன்று காலை இந்தப் படங்கள் வெளியாகின. ஆனால் வளைகுடா நாடுகளில் நேற்று மாலையே படங்கள் வெளியாகிவிட்டன.

இன்று அதிகாலை 4 மணிக்கு குரோம்பேட்டை வெற்றியில் ஜில்லா படத்தின் முதல் காட்சி திரையிடப்பட்டது. காசி, ஏஜிஎஸ், ராக்கி போன்ற திரையரங்குகளிலும் ஜில்லா சிறப்புக் காட்சி காலையில் ஆரம்பமானது. ரசிகர்கள் பெரும் அளவுக்கு வந்ததால், இந்தக் காட்சிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் திரும்பினர்.
சென்னை மட்டுமல்லாமல், திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி போன்ற நகரங்களிலும் பெரும் உற்சாகத்துடன் ஜில்லா சிறப்புக் காட்சிகளை பார்த்தனர் ரசிகர்கள்.
வீரம்
வீரம் படத்தின் சிறப்புக் காட்சிகளும் சில இடங்களில் காலை 4 மணிக்கே ஆரம்பமாகின. அஜீத் ரசிகர்கள் மிக உற்சாகமாக படத்தை வரவேற்றனர். சில இடங்களில் தாரை தப்பட்டை முழங்க வேட்டி டான்சுடன் ஆட்டம் போட்டபடி அரங்குக்குள் சென்றனர்.

இன்று முதல் நாள் மட்டுமே இரு படங்களையும் சில அரங்குகளில் மட்டும் 6 காட்சிகள் வரை ஓட்டுகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.
மேலும் பொங்கலை முன்னிட்டு தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதால், படங்கள் எப்படி இருந்தாலும், வசூலுக்கு குறைவிருக்காது என்பது நிச்சயம்.


Click it and Unblock the Notifications











