நான் உசுரோட இருக்கும்வரை மோடியே பிரதமராக இருக்கணும்: நடிகர் ஆசை
டெல்லி: தான் உயிருடன் இருக்கும் வரை மோடியே இந்திய பிரதமராக இருக்க விரும்புவதாக பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் இருந்து ரஜினிகாந்த் சென்றிருந்தார். மேலும் பாலிவுட் பிரபலங்களான அனுபம் கேர், கரண் ஜோஹார், விவேக் ஓபராய், ஹேமமாலினி, கங்கனா ரனாவத், ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, ஷாஹித் கபூர், சுஷாந்த் சிங் ராஜ்புட், அபிஷேக் கபூர், ஆனந்த் எல். ராய், சித்தார்த் ராய் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாலிவுட் பிரபலங்கள் ரஜினிகாந்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். திரையுலக பிரபலங்களை பார்த்தபோது இது பதவியேற்பு விழாவா, இல்லை விருது வழங்கும் விழாவா என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட சீனியர் பாலிவுட் நடிகர் ஜிதேந்திரா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது,
நான் உயிருடன் இருக்கும் வரை மோடியே இந்திய பிரதமராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது வரலாற்று சிறப்புமிக்க தருணம் ஆகும். நான் மோடிஜியின் தீவிர ரசிகன். இந்த நாடு நல்ல மனிதரின் கையில் தான் உள்ளது என்று நினைக்கிறேன் என்றார்.
மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற நாள் அன்று ட்விட்டரில் மோடியை கான்டிராக்டர் நேசமணி முந்திவிட்டார். நேசமணி இந்திய அளவில் மட்டும் அல்ல உலக அளவில் டிரெண்டானார்.
ஒரு நாள் முழுவதும் நேசமணி தான் மோடியை முந்திக் கொண்டு டிரெண்டானார். யாருப்பா இந்த நேசமணி, எதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்கிறீர்கள் என்று தங்கத் தமிழனான அந்த கான்டிராக்டர் பற்றி தெரியாதவர்கள் தலைமுடியை பிய்த்துக் கொண்டிருந்தனர். மேலும் நேசமணியை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் போட்டனர். மோடி பதவியேற்றதும் நேசமணிக்கு உரிய நியாயம் கிடைக்க வழிவகை செய்வார் என்றெல்லாம் கலாய்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











