சத்தமில்லாமல் காதலியை மணந்தார் நடிகர் ஜான் ஆபிரகாம்
மும்பை: இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் தனது காதலி பிரியா ருன்சலை திருமணம் செய்து கொண்டார்.
மாடலாக இருந்து இந்தி படங்களில் நடிக்க வந்தவர் ஜான் ஆபிரகாம். கட்டுக்கோப்பான உடல் வாகுக்கு சொந்தமானவர். பைக் பிரியர் அல்ல வெறியர் என்று தான் அவரை சொல்ல வேண்டும்.
ஜான் ஆபிரகாமும், நடிகை பிபாஷா பாசுவும் சுமார் 10 ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்தனர்.

பிபாஷாவுடன் பிரிவு
பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்த ஜான் ஆபிரகாமும், பிபாஷாவும் காதலை முறித்துக் கொண்டு பிரிந்துவிட்டனர். பிபாஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் தான் ஜான் அவரை பிரிந்தார் என்று கூறப்பட்டது.

பிரியா
பிபாஷாவை பிரிந்த பிறகு சில காலம் சோகமாக இருந்த ஜான் நண்பர்கள் மூலம் 2010ம் ஆண்டு முதலீட்டு ஆலோசகரான பிரியா ருன்சலை சந்தித்தார். பிறகு ஜானும், பிரியாவும் காதலிக்கத் துவங்கினர்.

ரகசிய திருமணம்
ஜான் ஆபிரகாம் எப்பொழுது பிரியாவை திருமணம் செய்வார் என்று அவரது ரசிகர்களும், பாலிவுட்டும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்நிலையில் அவர் சத்தமில்லாமல் பிரியாவை திருமணம் செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

ட்வீட்
ஜானுக்கு திருமணம் நடந்ததே அவர் ட்விட்டரில் தெரிவித்த பிறகே அனைவருக்கும் தெரிய வந்தது. அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு அன்பு, மகிழ்ச்சி மற்றும் நல்லவைகளை கொண்டு வரட்டும். லவ் ஜான் மற்றும் பிரியா ஆபிரகாம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











