சச்சின் படத்துல மிஸ்ட் எஃபெக்ட்லாம் போட்டு விஜய் சாரை டார்ச்சர் பண்ணேன்.. ஓபனாக பேசிய ஜான் மகேந்திரன்!
சென்னை: சச்சின் படம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப் பெற்றதாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பை படக்குழு நடத்தியது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கில்லி படம் எப்படி ரீ ரிலீஸ் செய்யப்பட்டதோ அதே போல உலகம் முழுவதும் சச்சின் படத்தையும் ரீ ரிலீஸ் செய்வார் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த படத்தை எடுத்து 20 வருடங்கள் ஓடிவிட்டனவா என்றே ஆச்சர்யமாக இருப்பதாக படத்தின் இயக்குநர் ஜான் மகேந்திரன் நன்றி தெரிவித்து பேசினார்.
படத்தில் நடித்த நடிகர்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் படத்தை திரையரங்குகளில் புதிய விஜய் படம் போல கொண்டாடி வரும் ரசிகர்களுக்கும் நன்றி கூறினார்.

இந்த படத்தில் படப்பிடிப்பின் போது எந்தளவுக்கு நடிகர் விஜய் தான் டார்ச்சர் செய்தேன் என்பது குறித்தும் விளக்கமாக ஜான் மகேந்திரன் பேசியது விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், பலரும் ட்ரோல் செய்து வரும் அந்த புகை சீனுக்கும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஜான் மகேந்திரனின் சினிமா வாழ்க்கை: 2005ம் ஆண்டு சச்சின் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ஜான் மகேந்திரன். அந்த படம் சந்திரமுகி படத்துக்குப் போட்டியாக வெளியான நிலையில், ரா ரா சூறாவளியில் சிக்கி விட்டது என கலைப்புலி எஸ். தாணுவே சமீபத்திய பேட்டியில் கூறினார். சச்சின் பெரிதாக கைகொடுக்காத நிலையில், ஜான் மகேந்திரனுக்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நந்தாவை வைத்து 2007ல் ஆணிவேர் எனும் இலங்கை சப்ஜெக்ட் படத்தை எடுத்தார். அதன் பின்னர் எந்தவொரு படத்தையும் அவர் இயக்கவில்லை. வசனகர்த்தாவாகவும் இந்தி படங்களை தமிழ் மொழிக்கு டப் செய்யும் பணிகளையும் செய்துள்ளார். டெல்லி பெல்லி படத்தின் கதையை சேட்டை படத்துக்காக மாற்றினார். தனுஷின் ராஞ்சனாவை அம்பிகாபதி என தமிழ் படுத்தினார். காஷ்மோரா, தர்பார் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
தளபதி ரசிகர்களுக்கு நன்றி: 20 வருடங்கள் கழித்து ரீ ரிலீஸ் ஆகியுள்ள சச்சின் படத்தை தியேட்டர்களில் திருவிழா போல கொண்டாடி வரும் தளபதி ரசிகர்களுக்கு ரொம்பவே நன்றி. இந்த அளவுக்கு மீண்டும் பெரியளவில் ரீ ரிலீஸ் பண்ணுவார் தாணு சார் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. முதல் நாளில் மட்டுமின்றி தொடர்ந்து ஒரு வாரமாக ரசிகர்கள் திரையரங்குகளில் வரவேற்பு கொடுத்து வருவதை ரீல்ஸ்களில் பார்த்து ஆடிப்போய்விட்டேன் என்றார்.

விஜய் சாரை டார்ச்சர் பண்ணிட்டேன்: சச்சின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜீவா இன்று நம்மிடையே இல்லை என்பது தான் எனக்கு ரொம்பவே வருத்தமான விஷயம். படத்தை அந்தளவுக்கு அழகாக எடுத்திருப்பார். அதில் வரும் மிஸ்ட் எஃபெக்ட் எல்லாம் மெஷின் வைத்து போட்டு ஷாட் எடுப்போம். விஜய் சாரை போட்டு டார்ச்சர் பண்ணுவோம். ஆனால், அதெல்லாம் ஏன் பண்றீங்க என ஒருபோதும் அவர் எரிச்சலானதே கிடையாது. கதையை கேட்கும் போதே இந்த படத்தை நாம பண்ணலாம் என்றார். அவரை இதற்குமேல் இப்படி ஜாலியாக படங்களில் பார்க்க முடியாது என்பது வருத்தமாக இருந்தாலும், அவர் இன்னொரு பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டார். அவருக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் என்றார் ஜான் மகேந்திரன்.


Click it and Unblock the Notifications











