Vijayakanth - அது ரொம்ப நல்ல பொண்ணு.. மனச நோகடிக்காத.. சக நடிகைக்காக நடிகரிடம் அட்வைஸ் செய்த விஜயகாந்த்
சென்னை: விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கும் சூழலில் அவர் பற்றிய நினைவுகளை பலரும் பகிர்ந்துவருகிறார்கள். மேலும் அவர் என்னவெல்லாம் நல்ல விஷயங்கள் செய்தார் என்பது குறித்தும் அதிகம் இணையத்தில் பகிரப்பட்டுவருகின்றன.
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கிறார். அவரது உடல் இன்று மாலை கோயம்பேடில் இருக்கும் தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தின் வளாகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. தற்போது தீவுத்திடலில் இருக்கும் அவரது உடலுக்கு பொதுமக்கள் அலைகடலென திரண்டு வந்து தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர். கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கிறது.

எளிமையான விஜயகாந்த்: அவரது மரணத்துக்கு இவ்வளவு பெரிய கூட்டம் வருவதற்கு ஒரே காரணம் என்னவென்றால் அவர் அத்தனை பேரிடமும் எளிமையாக பழகினார். அந்த எளிமைதான் அவரை அனைவரிடமும் கொண்டு போய் சேர்த்தது. இந்த சூழலில் பத்திரிகையாளரும், யோகி, கயல் உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான தேவராஜ் விஜயகாந்த் குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கயல் தேவராஜ் பதிவு: அந்தப் பதிவில் அவர், "சவுந்தர்யா அழுகை விஜயகாந்த் அறிவுரை.. நான் எவ்வளவு பெரிய 'சேடிஸ்ட்' ஆக இருந்தால், மலரைப் போன்ற மெல்லிய மனம் கொண்ட சவுந்தர்யாவை அழ வைத்திருப்பேன். இப்போது அந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்கும்போது, என்மீது பயங்கர வெறுப்பு வருகிறது. சவுந்தர்யா நடித்த பல படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறேன். அவரை 'காதலா காதலா', 'படையப்பா' போன்ற படங்களின் படப்பிடிப்பில் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
சொக்கத்தங்கம்: பொள்ளாச்சியில் நடந்த 'சொக்கத்தங்கம்' படப்பிடிப்பில் நடந்த சம்பவம் இது. கே.பாக்யராஜ் இயக்கத்தில் விஜயகாந்த், சவுந்தர்யா, பிரகாஷ்ராஜ், உமா நடித்தனர். அன்று சேத்துமடை பங்களாவில் படப்பிடிப்பு. முதலில் விஜயகாந்திடம் பேசினேன். பிறகு உமாவிடம். அதற்குப் பிறகு சவுந்தர்யாவிடம். சுவாரஸ்யமாகப் பேச்சு நடந்து கொண்டிருந்தது.
திடீரென்று சவுந்தர்யாவிடம், 'உங்களுக்கும், தெலுங்கு நடிகர் ஒருத்தருக்கும் காதலாமே? நீங்க அவரோட கட்டுப்பாட்டுல இருக்கிறதா சொல்றாங்களே...' என்று நான் சாதாரணமாக கேட்டபோது, உணர்ச்சிவசப்பட்ட சவுந்தர்யா கண்கலங்கி விட்டார். 'வதந்திகளுக்கு நான் என்ன பதில் சொல்றது? எனக்கு ஏன் மீடியாக்காரங்க மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டீங்க...' என்று கேட்டார். நான் அமைதியாக இருந்தேன்.
சமாதனம் ஆன சவுந்தர்யா: பிறகு உமாவிடம் சவுந்தர்யா, 'ஏன் இவரு இப்படி கேள்வி கேட்கறாரு?' என்றார். சில பத்திரிகைகளில் வெளியான கிசுகிசுக்களைப் படித்துவிட்டு, அது உண்மையாக இருக்குமோ என்று விசாரிப்பதற்காகத்தான் அப்படி கேட்டேன் என்று சவுந்தர்யாவிடம் சொன்னேன். பிறகு அவர் சமாதானமானார்.
விஜயகாந்த் அட்வைஸ்: என்றாலும், மதிய உணவு இடைவேளையில் என்னைப் பற்றி விஜயகாந்திடம் சவுந்தர்யா ஏதோ சொல்ல, என்னிடம் தனியாகப் பேசிய விஜயகாந்த், 'அது ரொம்ப நல்ல பொண்ணு தேவராஜ். ஏதாவது கேட்டு மனசை நோகடிக்காதே' என்றார். உடனே நான் சவுந்தர்யாவிடம், 'உங்க மனசு புண்படுற மாதிரி கேட்டிருந்தா, என்னை மன்னிச்சிடுங்க மேடம்' என்றேன். இதை சற்றும் எதிர்பார்க்காத சவுந்தர்யா, என் கையைப் பிடித்து குலுக்கி, 'வெரிகுட்' என்றார்" என குறிப்பிட்டிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் விஜயகாந்த்துக்கு எவ்வளவு பெரிய நல்ல மனசு. அவர் நினைத்திருந்தால் இந்த பொண்ணுக்காக நாம் ஏன் பேச வேண்டும் என்று நினைத்து ஒதுங்கியிருக்கலாம். ஆனால் தன்னுடைய சக நடிகை மனம் நொந்துவிடக்கூடாது என்று நினைத்ததால்தான் பத்திரிகையாளரை அழைத்து விஜயகாந்த் அட்வைஸ் செய்திருக்கிறார். உண்மையில் கேப்டன் மனசில் சொக்கத்தங்கம் என்று எமோஷனலாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











