ஹிந்தி நோ என்றார்.. மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.. சூர்யா ஒரு பச்சோந்தி.. பிரபலம் விமர்சனம்
சென்னை: சூர்யா இப்போது கங்குவா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் கங்குவாவை ஞானவேல் ராஜா பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பொருட்செலவில் உருவாகியிருக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகியிருக்கும் சூர்யா குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் சூர்யா ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. அவரது நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. பாண்டிராஜ் இயக்கியிருந்த அத்திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் கமிட்டானார் சூர்யா. ஆனால் அதிலிருந்து வெளியேறிவிட்டார். தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் கமிட்டானார். ஞானவேல் ராஜா மிகப்பெரிய பொருட்செலவில் அந்தப் படத்தை தயாரிக்கிறார்.

முக்கியமான படம்: சிவா இதற்கு முன்பு இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியை சந்தித்தது. தோல்வி என்பதைத் தாண்டி கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டது. இதன் காரணமாக கங்குவா படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார். தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு இந்தப் படத்தை வைத்து தரமான பதிலடியை கொடுக்க முனைப்போடு பணியாற்றுகிறாராம் சிவா. இதில் சூர்யாவுடன் திஷா பதானி, அனிமல் பட புகழ் பாபி தியால் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
பொது கருத்து: இதற்கிடையே சூர்யா கடந்த சில காலமாகவே தனது மனதில் பட்ட பொது கருத்துக்களை பட்டென்று போட்டுடைத்துவந்தார். அது அரசியல் ரீதியாகவும் பெரும் விவாதத்தை கிளப்பின. முக்கியமாக நீட் பிரச்னை குறித்தும், ஜோதிகா கோயில் பற்றி பேசி சர்ச்சையானது குறித்தும் என பல விஷயங்களை பேசினார். இந்நிலையில் சூர்யா குறித்து அந்தணன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
அந்தணன் பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நீட் தேர்வு விவாகரத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு சூர்யா தனது கருத்தை ரொம்பவே ஆக்ரோஷமாக பேசினார். ஆனால் திமுக ஆட்சியிலும் நீட் தற்கொலைகள் நடக்கத்தான் செய்கின்றன. இதனை சூர்யா அடக்கியே வாசிக்கிறார். ஒரு தேர்வு நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்காது நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் வேண்டும். எந்த கவலையாக இருந்தாலும் சில காலத்துக்கு பிறகு மறைந்துவிடும் என்று பேசியிருக்கிறார்.
திமுக ஆட்சி: அதாவது கடந்த காலத்தில் அதிமுகவை குற்றஞ்சாட்டிய சூர்யா, இப்போது மாணவர்களின் பலவீனங்களை சுட்டிக்காட்டும் விதமாக பேசிவிட்டார். காரணம், திமுக ஆட்சியில் எதையும் பேசக்கூடாது என்று அடக்கி வாசிக்கிறார். சூர்யாவை பொறுத்தவரை அதிமுக ஆட்சிக்கு வந்துவிட்டால் பொங்க வேண்டும். திமுக என்றால் அடக்கி வாசிக்க வேண்டும் என்ற பாலிசியை அவர் கொண்டிருக்கிறார்.
மும்பையில் செட்டில்: இப்போது இங்கே இவருடைய பேச்சு எடுபடாது என்று தெரிந்துதான் மும்பைக்கு சென்று ஒளிந்துகொண்டார். அதுமட்டுமின்றி ஹிந்தி வேண்டாம், தமிழை விடவும் எந்த மொழியும் தலை சிறந்தது இல்லை. ஹிந்தியை புறக்கணிப்போம் என்று வாய்க்கு வாய் பேசிவிட்டு இப்போது மும்பையில் மனைவி மகளுடன் செட்டில் ஆகிவிட்டார். நிமிடத்துக்கு நிமிடம் பேச்சை மாற்றிக்கொண்டு; செயல்களில் உறுதி இல்லாத அவர் ஒரு பச்சோந்தி போல் மாற்றிக்கொள்கிறார்"" என்றார்.


Click it and Unblock the Notifications











