Anthanan - ஹீரோக்கள் தேவையில்லாத வேலை செய்கிறார்கள் - அந்தணன் காட்டமான விமர்சனம்
சென்னை: Anthanan (அந்தணன்) பாடல் எழுதுவது ஹீரோக்களுக்கு தேவையில்லாத வேலை என பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பாடல்கள் எழுதுவது சமீப காலமாக அதிகரித்திருக்கிறது. தியாகராஜ பாகவதர் போன்றவர்கள் நடித்துக்கொண்டே எழுதினாலும், பாடினாலும் அவர்களது பாடல்களில் அர்த்தமும், அழகியலும் இருந்தது. ஆனால் இப்போதைய ஹீரோக்கள் எழுதுவது வளரும் சந்ததிக்கும், தமிழுக்காகவும் இல்லாமல் வெறும் சத்தத்துக்காக இருப்பதாக பலர் தங்களது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

தனுஷ்: ஹீரோக்கள் பாடல் எழுதி ஹிட்டாகலாம் என்பதை பல காலத்துக்கு பிறகு மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவந்தவர் தனுஷ். 3 படத்தில் அவர் எழுதிய ஒய் திஸ் கொலவெறி உலகம் முழுக்க ஹிட்டடிக்க தொடர்ந்து பாடல்கள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய ஒன்றிரண்டு பாடல்களை தவிர மற்ற பாடல்கள் எல்லாமே இக்கால ட்ரெண்டுக்கும், சத்தத்துக்கும் ஏற்றவாறு மட்டுமே எழுதியிருக்கிறார். இதனால் காலப்போக்கில் அதுவே ஒரு ஸ்டைலாகவும் மாறிப்போனது.
சிவகார்த்திகேயன்: தனுஷுக்கு அடுத்ததாக அந்த வழக்கத்தை கையில் எடுத்திருப்பவர் சிவகார்த்திகேயன். தனுஷாவது நல்ல தரத்தில் ஒன்றிரண்டு பாடல்களை எழுத சிவகார்த்திகேயன் எழுதுவதில் இருப்பதோ பாடல் வரிகளா இல்லை அவரே கண்டுபிடித்த சொற்களா எனும் அளவில்தான் இருக்கின்றன. சமீபத்தில் அவர் பீஸ்ட் படத்தில் எழுதிய ஹலமதி ஹபிபோ பாடல் ஹிட்டானாலும் அந்த வரிகளுக்கு என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்டாலே தெரியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. ஜெயிலர் படத்தில்கூட அவர் பாடல் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.
சிவாவின் உதவி: அதேசமயம் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவதற்கு வாங்கும் ஊதியத்தை; மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் மகன் ஆதவன், மகள் மகா லட்சுமி ஆகியோரின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்துவருகிறார். இதன் காரணமாக அனைவரும் அவரை பாராட்டவும் செய்கின்றனர். ஆனால் தன்னுடைய வரிகளில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகவே எழுகிறது.எது எப்படியாக இருப்பினும் ஹீரோக்கள் பாடல் எழுதினால் பாடலாசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதுதான் உண்மை,

அந்தணன் பேட்டி: இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் அந்தணன் இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஹீரோக்கள் பாடல்கள் எழுதுவது தேவையில்லாத வேலை. பாடல்களை அவர்கள் மலினமாக்கிக்கொண்டே செல்கின்றனர். ஆம்பல், மௌவல் என ஒரு பாடலில் வைரமுத்து எழுதினார். அதனை கேட்ட பலரும் அப்படி என்றால் என்னவென்று தேடினார்கள். ஆனால் ஹீரோக்கள் எழுதுவதில் அர்த்தமே இல்லை. அது ஒரு ஃபாஸ்ட் புட் போல்தான்.
பாடலாசிரியரின் வேதனை: முழு நேர பாடலாசிரியர் ஒருவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர், 'சார் எங்களுக்கு பாட்டு எழுதுறதுதான் தொழில். நாங்க இதை விட்டுட்டு இசையமைக்கவோ, நடிக்கவோ போக முடியாது. ஆனால் இசையமைப்பாளரோ, நடிகரோ பாட்டு எழுதுறாங்க. அவங்களுக்கு அதுவா தொழில். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை' என கூறினார். அவர் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











