Ameer - கார்த்தி Vs அமீர் பஞ்சாயத்து.. என்னதான் நடந்தது?.. டாப் சீக்ரெட்டை சொன்ன பத்திரிகையாளர்
சென்னை: Ameer (அமீர்) கார்த்திக்கும் அமீருக்கும் நடந்த பஞ்சாயத்து குறித்து பத்திரிகையாளர் அந்தணன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து அவர் ராம் படத்தை தயாரித்து இயக்கினார். அந்தப் படமும் சரியாக வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்திவீரன்: இப்படிப்பட்ட சூழலில் கார்த்தியை வைத்து பருத்திவீரன் படத்தை இயக்கினார் அமீர். அந்தப் படம்தான் கார்த்திக்கு முதல் படம். தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் பருத்திவீரன் திரைப்படம் எப்போதுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கோலிவுட்டில் கிராமத்து கதைகளுக்கான ட்ரெண்டை மீண்டும் செட் செய்தது அந்தப் படம்தான்.
பிரச்னை: பருத்திவீரன் திரைப்படம் கார்த்தி மற்றும் அமீர் ஆகியோரின் வாழ்க்கையில் மறக்க முடியாத படம். அதேபோல் அந்தப் படம்தான் சூர்யா, கார்த்தி vs அமீர் என்ற நிலையையும் உருவாக்கியது. அந்தப் படத்தின்போது ஏற்பட்ட பிரச்னை காரணமாக இன்றுவரை சூர்யாவும் அமீரும் பேசிக்கொள்வதில்லை. அதற்கு யூகங்களாக பல காரணங்கள் சொல்லப்பட்டன.
மௌனம் கலைப்பு: சூழல் இப்படி இருக்க சமீபமாக சூர்யா தரப்பும் அமீர் தரப்பும் பருத்திவீரன் பஞ்சாயத்து குறித்து மௌனம் கலைக்க ஆரம்பித்திருக்கின்றன.. அதாவது பருத்திவீரன் படத்தில் ஏற்பட்ட பண பிரச்னைதான் இந்த மோதலுக்கு காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்தி 25: இதற்கிடையே சமீபத்தில் கார்த்தியின் 25ஆவது படமான ஜப்பான் படம் ரிலீஸானது. ரிலீஸுக்கு முன்னதாக கார்த்தி 25 என்ற விழா கொண்டாடப்பட்டது. இதில் சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால் கார்த்தியை அறிமுகப்படுத்திய அமீர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அதுகுறித்து பேசிய அமீர், எனக்கு அழைப்பு வரவில்லை அதனால் செல்லவில்லை என்றிருந்தார்.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து பேசுகையில், "கார்த்தி 25 நிகழ்ச்சிக்கு தனக்கு கார்த்தி ஒரு உதவியாளரை வைத்து அழைப்பு விடுத்தார் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கார்த்தி அந்த உதவியாளரை அனுப்பதியதற்கு காரணம் என்னவென்றால், உங்களை சந்திக்க வேண்டும் என கார்த்தி விருப்பப்படுகிறார். அதற்கான நேரம் எப்போது ஒதுக்க முடியும் என்பதை அமீரிடம் கேட்பதற்காகத்தான்.
அப்போது அமீர் அந்த உதவியாளரிடம் சத்தம் போட்டு அனுப்பிவிட்டார். பிறகு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து கார்த்தி அமீருக்கு மெசேஜும் செய்திருக்கிறார். அதற்கு முன்னதாகவே ஃபோன் செய்திருக்கிறார். ஆனால் அமீர் எடுக்கவில்லை. ஒருமுறை சினிமா விழா ஒன்றில் மேடையில் யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி ஆகியோர் நின்றிருந்தனர். அந்த விழாவில் அமீர் முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.
அந்த சமயத்தில் அமீரை யுவன் ஷங்கர் ராஜா மேடைக்கு அழைத்தார். ஆனால் மேடையில் கார்த்தி இருக்கிறார் என்கிற ஒரே காரணத்தால் அமீர் செல்லவில்லை. அது கார்த்திக்கு ரொம்பவே அவமானமாகிவிட்டது"என்றார்.


Click it and Unblock the Notifications











