சினிமாக்காரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் பணம் கொடுக்குறார் போல?.. நல்லவேளை ரஜினி போகல.. அந்தணன் ஷேரிங்ஸ்
சென்னை: கோவையில் ஈஷா யோகா மையத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திவருகிறார். அந்த யோகா மையத்தை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தாலும் அங்கு பிரபலங்கள் முதல் சாமானியர்கள்வரை பலரும் தொடர்ந்து செல்கிறார்கள். அதிலும் சிவராத்திரி வந்தால் அங்கு லட்சக்கணக்கானோர் கூடுவார்கள். சமீபத்தில் நடந்த மஹா சிவராத்திரி விழாவில்கூட தமன்னா, பூஜா ஹெக்டே, சந்தானம், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தச் சூழலில் பத்திரிகையாளர் அந்தணன் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ் கோவை மாவட்டத்தில் ஈஷா யோகா மையத்தை நடத்திவருகிறார். அங்கு பெரிய சிவ லிங்கம் ஒன்றையும் நிறுவியிருக்கிறார். சிவ பக்தர்கள் ஏராளமானோர் அங்கு குவிவதுண்டு. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் அங்கு வருவது உண்டு. அப்படி வருபவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்குவதுமுண்டு. அங்கு சென்றால் மனதுக்கு ஒருவித அமைதி கிடைப்பதாக பலரும் சொல்வார்கள். அதேசமயம் ஈஷா யோகா மையத்தை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும் எழுந்துவருகின்றன.

என்ன சர்ச்சை: அதாவது அந்த யோகா மையத்தையும், சிவ வழிபாட்டு தலத்தையும் நிறுவுவதற்காக பல ஆயிரம் ஹெக்டேர் அளவிலான காடுகளை ஜக்கி அழித்துவிட்டார் என்றும்; அதன் காரணமாக வன விலங்குகளின் வாழ்விடங்கள் காணாமல் போய்விட்டதாக வன ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால் அதனை ஜக்கி வாசுதேவ் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. அதேபோல் அமைதி தேடி வரும் பக்தர்களில் சிலரை ஏதோ செய்து யோகா மையத்தின் கட்டுப்பாட்டிலேயே ஜக்கி தங்க வைத்துவிடுகிறார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
மஹா சிவராத்திரி: இப்படி சர்ச்சைகளும், குற்றச்சாட்டுக்களும் தொடர்ந்து வலுத்துக்கொண்டே போனாலும் அங்கு வருடம் முழுவதும் பக்தர்கள் குழுமுவார்கள். முக்கியமாக சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மஹா சிவராத்திரி விழாவில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள். அப்போது நீண்ட மேடையில் ஜக்கி வாசுதேவ் நடனமாட மற்றவர்களும் பக்தி பரவசமடைந்து நடனம் ஆடுவார்கள். அது சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களை சந்தித்த கதைகளும் உண்டு.
இந்த வருட மஹா சிவராத்திரி: அந்தவகையில் இந்த வருடமும் அங்கு மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. அதில் சந்தானம், தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல் சங்கர் மகாதேவன் தனது மகனுடன் மேடை ஏறி பாடலும் பாடினார். சந்தானமோ கண்ணீர் விட்டபடி பக்தியில் உருக, பூஜா ஹெக்டேவோ உச்சக்கட்ட வைபில் நடனம் ஆடவும் செய்தார். இவர்கள் மட்டுமின்றி கடந்த வருடங்களில் சமந்தா உள்ளிட்டோரும் நடனம் ஆடிய வீடியோ ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக சந்தானம் அழுத புகைப்படம் பெரும் ட்ரோலுக்கு உள்ளானது.
அந்தணன் பேச்சு: இந்நிலையில் சினிமாக்காரர்கள் ஜக்கி வாசுதேவை சந்திப்பதற்கு செல்வது குறித்து பேசியிருக்கும் பத்திரிகையாளர் அந்தணன், “சினிமாக்காரர்களுக்கு ஜக்கி வாசுதேவ் ஃபைனான்ஸ் கொடுக்கிறார்போல. சந்தானம், தமன்னா, காஜல் அகர்வால் என சினிமா நட்சத்திரங்கள் அவரை பார்ப்பதற்கு குவிகிறார்கள். இதில் ரஜினிகாந்த்தை பாராட்டியே ஆக வேண்டும். ஏனெனில் நல்லவேளையாக அவர் ஜக்கியின் பிராண்ட் அம்பாசிடராக மாறவில்லை. ஏற்கனவே நான் சாமியாராக போகிறேன் என்று சொன்ன ரஜினியை ரசிகர்கள்தான் அந்த முடிவிலிருந்து பின்வாங்க வைத்தார்கள்” என்றார்.
சத்குருவுக்கு ஆபரேஷன்: முன்னதாக கடந்த மாதம் சத்குருவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது மூளையில் ரத்தம் உறைந்திருப்பதாக மருத்துவர்கள் கண்டுபிடித்ததை அடுத்து சத்குருவுக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் அவர் நலமுடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


Click it and Unblock the Notifications











