இளையராஜா சொல்வதைத்தான் தனுஷ் கேட்பார்.. பயோபிக் பற்றி பிரபலம் என்ன இப்படி சொல்லிட்டாரே?
சென்னை: இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக இருப்பதுதான் கடந்த சில நாட்களாக திரையுலகில் பேச்சாக இருக்கிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்க அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குகிறார். படத்தின் தொடக்க விழா நடைபெற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. கமல் ஹாசன் திரைக்கதை எழுதவிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது. இந்தச் சூழலில் இளையராஜா பயோபிக் எப்படி இருக்கும் என்பது குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.
இசைஞானி இளையராஜா இதுவரை 1000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அடுத்ததாக அவரது இசையமைப்பில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு 'இளையராஜா' என்ற பெயரில் படமாகவிருக்கிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார். அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்க; கமல் ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். படத்தின் தொடக்க விழா சில நாட்களுக்கு முன்பு பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது.

அருண் மீது சந்தேகம்: முன்னதாக இந்தப் படத்தை இயக்குநர் பால்கி இயக்குவார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. அதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் திடீரென அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை ஒழுங்காக இயக்கிவிடுவாரா என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பிவருகின்றனர்.
சாதிதான் காரணமா?: அதேபோல் இளையராஜா பயோபிக்கை முதலில் மாரி செல்வராஜ் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அவருக்கு பதிலாக அருண் மாதேஸ்வரன் இயக்குவதற்கு இளையராஜாதான் காரணம் என்று சொல்கிறார்கள். மாரி செல்வராஜும் தானும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே அவர் படத்தை இயக்கினால் தேவையில்லாத முத்திரைகள் விழலாம் என கூறியதற்கிணங்க அருண் மாதேஸ்வரை இந்தப் படத்தின் இயக்குநராக ஃபிக்ஸ் செய்துவிட்டார்கள் என்று திரைத்துறையில் பேச்சு ஓடுகிறது.
பிஸ்மி பேட்டி: மேலும் இந்தப் படத்தில் இளையராஜா வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களும் இடம்பெறுமா என்ற கேள்வியையும் ஒருதரப்பினர் முன்வைத்து வருகிறார்கள். அந்தவகையில் பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இளையராஜாவின் தோற்றம் தனுஷுக்கு ஆரம்பகாலத்திலிருந்தே இயற்கையாக இருக்கிறது. அது படத்துக்கு மிகப்பெரிய பலம். அதுமட்டுமின்றி பாடும் திறமை தனுஷுக்கு இருக்கிறது. எனவே அவரைத் தவிர்த்து வேறு யாரும் அவரது கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியுமா என்று தெரியவில்லை.
இசையால்தான் இவ்வளவும்: அதேபோல் இளையராஜாவுக்கு கிடைத்திருக்கும் இந்தப் புகழும், மரியாதையும் இசையால் மட்டும்தான் கிடைத்திருக்கிறது. அவரை தனிப்பட்ட நபராக பார்த்தால் அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கே கிடையாது. அதற்கு அவர் நடந்துகொள்ளும் விதம்தான் காரணம். இந்த பயோபிக் படத்தில் இளையராஜா எதையெல்லாம் அனுமதிக்கிறாரோ அதுமட்டும்தான் இடம்பெறும். அவர் பற்றிய எதிர்மறை காட்சிகள் எல்லாம் இப்படத்தில் இடம்பெறாது.
இளையராஜாதான் காரணம்: முக்கியமாக அவருடைய அரசியல் பிரவேசம் இந்தப் படத்தில் கண்டிப்பாக நியாயப்படுத்தும்விதமாகவே காட்சிகளை வைப்பார்கள். மாரி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்கவிடாமல் இளையராஜா பார்த்துக்கொண்டார்" என்றார். முன்னதாக இளையராஜா பாஜக சார்பில் மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதும்; அதற்கு தமிழ்நாட்டில் கடுமையான கண்டனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











