அப்போலோ மருத்துவமனைக்கு ரஜினி குடும்பம் பில் கட்டவில்லையா?.. என்ன நடந்தது?.. கொந்தளித்த பிரபலம்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுவருகிறது. ஞானவேல் கிளாஸாகவும் மாஸாகவும் ஒரு படத்தை கொடுத்துவிட்டார் என்று ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அதுகுறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி சில விஷயங்களை பேசியிருக்கிறார்.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் இன்று வெளியாகியிருக்கிறது.முதன்முறையாக ரஜினியும் ஞானவேலுவும் இணைந்திருப்பதால் உச்சக்கட்ட எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க சென்றார்கள். தமிழ்நாடு அரசும் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்ததால் முதல் காட்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

சூப்பர் ரெஸ்பான்ஸ்: வேட்டையன் படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ரஜினிக்காக மாஸ் காட்சிகளும், தனது ஸ்டைலில் க்ளாஸ் காட்சிகளையும் ஞானவேல் வைத்து அட்டகாசம் செய்துவிட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி படத்தில் அனிருத்தின் இசை பட்டையை கிளப்புவதாகவும்; தன் மீது வந்த விமர்சனத்துக்கெல்லாம் அவர் இதில் பதிலடி கொடுத்துவிட்டார் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆகமொத்தம் வேட்டையன் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதால் படக்குழுவும் ஹேப்பி அண்ணாச்சிதான்.
மருத்துவமனையில் ரஜினி: இதற்கிடையே ரஜினிகாந்த் உடல்நல குறைவால் சமீபத்தில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிவயிற்றில் உள்ள ரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் இருந்ததாகவும்; அதற்கான சிகிச்சையும், வேறு சில பரிசோதனைகளும் செய்யப்பட்டது. சில நாட்கள் மருத்துவமனையில் இருந்த அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் தான் குணமடைய வேண்டிய அனைவருக்குமே ரஜினிகாந்த் நன்றியும் தெரிவித்திருந்தார்.
விமர்சனம்: அதேசமயம் மருத்துவமனையில் ரஜினி அனுமதிக்கப்பட்டபோது சிலர் வாய்க்கு வந்ததை பேசினார்கள். அதாவது அவர் வேட்டையன் படத்தின் ப்ரோமோஷனுக்காகத்தான் ஹாஸ்பிட்டலில் இருக்கிறார் என்று ஒருதரப்பினரும், அப்போலோ மருத்துவமனைக்கு ரஜினிகாந்த்தின் குடும்பம் பில்லே கட்டவில்லை என்று இன்னொரு தரப்பினரும். அது ரஜினி ரசிகர்களை கொந்தளிப்பு அடைய செய்தது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிஸ்மி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
பிஸ்மி பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அப்போலோ மருத்துவமனையில் ரஜினி பெற்ற சிகிச்சைக்கு அவரது குடும்பத்தினர் பில் கட்டவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் தேவையில்லாத ஒன்று. சுத்த பொய். முக்கியமாக பில் கட்டப்பட்டதா இல்லையா என்பது மருத்துவமனை நிர்வாகத்துக்கும், ரஜினி குடும்பத்துக்கும் மட்டும்தான் தெரியும். அதேபோல் வேட்டையன் படத்தின் ப்ரோமோஷனுக்குகாகத்தான் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் மனசாட்சி இல்லாதவர்கள் கூறினார்கள். இப்படியெல்லாம் சொல்லவேக்கூடாது. ரொம்ப தவறு. இவர்கள் என்ன பெரிய புலனாய்வு புலிகளா? என்றார்.


Click it and Unblock the Notifications











