ஆர்த்தி குடும்பத்துக்கு இவங்க குடும்பம் சமம் இல்லை.. ரவி ஒப்பாரி வைக்கிறார்.. பிரபலம் இப்படி பேசுறாரு?
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார்கள் ரவி மோகன், ஆர்த்தி, கெனிஷா, சுஜாதா விஜயகுமார். ஆர்த்தியை விட்டு தான் பிரிவதாக கடந்த வருடம் ரவி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரையும் கெனிஷாவையும் இணைத்து வைத்து பலர் பேசினார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த அவர்; அண்மையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு கெனிஷாவுடன் ஒரே நிறமுடைய உடையை அணிந்து ஜோடியாக வந்திருந்தார். இதனால் மீண்டும் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளானது. சூழல் இப்படி இருக்க கெனிஷாதான் எனது வாழ்வின் ஒளி என ரவி அறிக்கை விட; ஆர்த்தியின் தாய் சுஜாதாவும் ஒரு அறிக்கை வெளியிட என நிலைமை இருக்கிறது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா இந்த விஷயம் குறித்து பேசியிருக்கிறார்.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணம் பல நூறு கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது. பயங்கர செலவு, நட்சத்திர கூட்டம் போன்ற விஷயங்களைவிடவும் ரவி மோகன் - கெனிஷாதான் அத்திருமணத்தின் ஹைலைட்டாக மாறியிருக்கிறார்கள். தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் ரவி. இன்னமும் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலைமயில் தனது தோழி கெனிஷாவுடன் அவர் வந்தது பரபரப்பை கூட்டியது. கெனிஷாவுடன் வந்ததை எதிர்பார்க்காத ஆர்த்தி அறிக்கை ஒன்றை எமோஷனலாக வெளியிட்டிருந்தார்.
ஆர்த்தியின் அறிக்கை: அந்த அறிக்கையில் அவர், "ஒரு தாயாக மட்டுமே இப்போது குரல் எழுப்புகிறேன். எனது குழந்தைகளுக்கு பொருளாதார ரீதியிலான பாதுகாப்பு முக்கியம். அவர் தந்தை என்கிற பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். எனது காதலையும் துச்சமாக தூக்கி எறிந்துவிட்டார் என்று பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார். மேலும் அன்னையர் தினத்தன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, "நீ என்னை பார்க்கும் விதம் புரிகிறது. நான் ஓகேயாக இருக்கிறேனா இல்லையா என சோதிப்பது போல பார்க்கிறாய். ஆனால் உண்மையில் நான் கவலைப்படுவது எல்லாம் உன்னை பற்றி மட்டும்தான்.

துணிச்சல் நிறைந்தவன்: நீங்கள் (மகன்கள்) இந்த வழியில் வளர்ந்திருக்கக்கூடாது. இருந்தாலும் நீ துணிச்சலும், கனிவும் நிறைந்தவன். நான் முதுகெலும்புடன் போராடும் போர்களை நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும். இந்த அன்னையர் தினத்தை நான் கொண்டாடவில்லை. என்னுடன் நடந்துகொண்டிருக்கும் இரண்டு ஆன்மாக்களை நான் மதிக்கிறேன். நீங்கள் இன்னும் சிறுவர்கள்தான். இருப்பினும் வளர்ந்த மனிதர்களாகவும் ஆகிவிட்டீர்கள். இந்த உலகம் உங்களை சந்திப்பது அதிர்ஷ்டம். ஆரவ், அயன் நாம் நெருப்பின் வழியில் நடந்துகொண்டிருக்கலாம். ஆனால் ஒன்றாக நாம் அதை கடக்கிறோம்" என உருக்கமாக தெரிவித்திருந்தார். அவரது அறிக்கை மற்றும் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை அடுத்து அவருக்கு ஆதரவு பெருக தொடங்கியது.
காட்டமான ரவி: சூழல் இப்படி இருக்க ரவி மோகனும் பதிலுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர், "என்னை பொன்முட்டையிடும் வாத்தாகவே அவர்கள் பார்த்தார்கள். பல நூறு கோடி ரூபாய்க்கு என்னை பொறுப்பேற்க வைத்தார்கள். எனது அப்பா, அம்மாவுக்கு பணம் அனுப்பக்கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. நான் அவரை பிரிந்த பிறகு எனது மகனுக்கு நடந்த விபத்தைக்கூட என்னிடம் சொல்லவில்லை. நான் ஆர்த்தியை மட்டும்தான் பிரிந்திருக்கிறேன். எனது மகன்களை அல்ல. கெனிஷாதான் எனது வாழ்க்கையின் ஒளி. எனக்கு கொடுக்கும் மரியாதையை அவருக்கும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்" என அவர் தரப்பிலிருந்து பல விஷயங்களை முன்வைத்தார். இதனையடுத்து இந்த விவகாரத்தில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஆர்த்தியின் தாய் சுஜாதா நேற்று தனது விளக்கத்தை அளித்தார்.
சுஜாதாவின் விளக்கம்: அவர் அளித்த விளக்கத்தில், "ரவியை நான் பல கோடி ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இதில் கொஞ்சம்கூட உண்மை இல்லை. அவரை நான் வெறும் கதாநாயகனாக மட்டும் பார்க்கவில்லை. எனது மாப்பிள்ளையாக மட்டும் பார்க்காமல் என்னுடைய மகனாகவே பார்த்தேன். அதனால் அவருக்கு எந்தக் கஷ்டமும் வந்துவிடக்கூடாது என்பதி கவனத்தோடு இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு பட ரிலீஸின்போது அதிகாலை ஐந்து மணிவரை வாங்கிய கடனுக்காக ஒரு வெள்ளை கவரை தவிர்த்து ஃபைனான்சியர்கள் நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து போட்டேன்.

ரவியிடம் ஆதாரம் இருக்கிறதா?: பல கோடி ரூபாய் நஷ்டத்தையும் மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக்கொண்டேன். இன்றுவரை அந்தக் கடனுக்குரிய வட்டியையும் நான் மட்டுமே கட்டுகிறேன். சைரன் பட ரிலீஸின்போதுகூட, அந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட இன்னொரு படத்தில் நடித்து தருகிறேன் என்றுதான் கடிதம் கொடுத்தார். என்னுடைய கடனுக்கு பொறுப்பேற்பதாக அவர் எந்த கையெழுத்தும் போடவில்லை.
கடந்த ஒரு வருடமாக நான் பலமுறை ரவியை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் தவிர்த்துவிட்டார். இந்த சினிமா விஷயத்தை சாக்காக வைத்து சந்தித்து பேசி குடும்ப பிரச்னையில் சமாதானத்தை எட்டலாம் என்ற எண்ணத்தில்தான் ஒரு தாயாக பத்து நாட்களுக்கு முன்பு ஒரு மெசேஜ் செய்தேன். மாறாக அவர் சொன்னது போல் படத்தில் நடிக்க நிர்பந்தப்படுத்துவதற்கு இல்லை. ரவி மோகன் சொன்னதுபோல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும் என்று இதன் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன்.
இதுதான் ஆசை: இன்றும் நான் மகனாகவே நினைக்கும் திரு ஜெயம் ரவி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் எப்பொழுதும் உங்களை ஒரு கதாநாயக பிம்பத்திலேயே நாங்கள் பார்க்கிறோம், ரசிக்கிறோம். நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது. என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும் இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை" என்று பல விஷயங்களை கூறினார்.
சேகுவேரா பேட்டி: இந்நிலையில் இந்த விஷயம் குறித்து பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "சில காலத்துக்கு முன்பு ரவியின் தாய் ஆர்த்தியை பற்றி ஒரு நிகழ்ச்சியில் அவ்வளவு புகழ்ந்து பேசியிருந்தார். ஆர்த்தி உண்மையில் கொடுமை செய்திருந்தால் எப்படி ரவியுடைய தாய் அப்படி பேசியிருப்பார். ரவி வெளியிட்டிருந்த அறிக்கையை பார்க்கையில் யாரோ சொல்லிக்கொடுத்து எழுதியது போல்தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி நான் நல்லவன்; என்னை நம்புங்கள் என்று அந்த அறிக்கையில் அவர் ஒப்பாரிதான் வைத்திருக்கிறார்.
ஈடே இல்லை: ஆர்த்தியின் குடும்பம் ஒன்றும் பணம் இல்லாத குடும்பம் இல்லை. அவர்கள் கோடீஸ்வரர்கள். பண ரீதியாக அந்தக் குடும்பத்துக்கு ரவியின் குடும்பம் சமமே இல்லை.எதுவாக இருந்தாலும் மனசாட்சியோடு பேச வேண்டும். முதலில் கெனிஷாவின் வரலாறு என்ன என்பதை ரவி சொல்வாரா?. ரவி ஒரு நல்ல மனிதர். கெனிஷாதான் ரவியை பயன்படுத்துகிறார் என்ற பேச்சு ஓடுகிறது. உயிரை கெனிஷா காப்பாற்றும் அளவுக்கு ரவி என்ன சீரியஸாக இருந்தார். ஆர்த்தி என்ன பெரிய வில்லியா?. ஆர்த்தி உண்மையில் வில்லியாக இருந்தால் எப்போதோ வெளியே வந்திருக்குமே. 16 வருடங்களாக கஷ்டப்பட்டேன் என்று ரவி சொல்கிறார். பிறகு எப்படி இரண்டு மகன்கள் வந்தார்கள். இந்த அளவுக்கு சென்ற பிறகும் ரவியை விடக்கூடாது என்று ஆர்த்தி நினைக்கிறார். அதுதானே இங்கு முக்கியம். ரவி சொல்லும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் பொருளாதார ரீதியாக மட்டும்தானே இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











