தெலுங்கு சினிமாவில் தலைதூக்கி இருக்கும் அரசியல்.. கைதுக்கு பின்னால் இருக்கும் நடிகர்!
சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் ஹைதராபாத் போலீசார் நேற்று அல்லு அர்ஜுனை கைது செய்தனர். இது உலகம் முழுவதும் பேசுபொருளான நிலையில், இதுகுறித்து பேசியுள்ள சேகுவேரா, இந்த கைதுக்கு பின்னால் முழுக்க முழுக்க அரசியல் இருக்கிறது என்று பேசி உள்ளார்.
அல்லு அர்ஜுன் மற்றும் ரஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5ந் தேதி உலகம் முழுவதும் வெளியானது. பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த இந்த திரைப்படம் வெறும் 6 நாட்களில் 1002 கோடி வசூல் செய்து சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4ந் தேதி இரவு ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்க்க அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் வந்து இருந்தனர்.

புஷ்பா 2 சர்ச்சை: இவர்கள் வந்ததை தெரிந்து கொண்ட ரசிகர்கள் பெருமளவில் அந்த தியேட்டரில் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரின் மகன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், திரையரங்க உரிமையாளர் மற்றும் மேலாளர் உள்ளிட்டோர் மீது சிக்கடபள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்ததைத் தொடர்ந்து அல்லு அர்ஜுனை நேற்று போலீசார் அவரது வீட்டில் கைது செய்தனர்.
அக்மார்க் அரசியல் கைது: இந்த கைது ஒட்டுமொத்த இந்தியாவை திருப்பி போட்டுள்ளது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள பத்திரிகையாளர் சே குவேரா, அல்லு அர்ஜுன் கைது சம்பவத்தை நான் முழுக்க முழுக்க அரசியலாக தான் பார்க்கிறேன். இது அக்மார்க் அரசியல் கைது தான். ஏனென்றால் பாதிக்கப்பட்டவருக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை இது இல்லை. ஆந்திர அரசியலில் முழுக்க முழுக்க சினிமா குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அல்லு அர்ஜுனுக்கும் அந்த நடிகருக்கும் ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருக்கிறது என்று கூறப்படுகிறது. ஆந்திராவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் கூட அல்லு அர்ஜுன், இந்த நடிகருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாமல் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இது அப்போதே, ஆந்திர ஊடகத்தில் பேசுபொருளானது.
அந்த நடிகர் தான் காரணம்: சினிமாவை வைத்து தான் ஆந்திராவில் அரசியல் செயல்பாடுகள் நடந்து வருகின்றன. இப்போது நடைபெற்ற பிரச்சனைக்கு காரணம் புஷ்பா 2 படத்தில் வரும், காட்சியும், வசனமும் தான். கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண் இறந்ததற்காக நீதி கேட்டு எல்லாம். இந்த கைது நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் கூட அஜித், விஜய் ரசிகர்கள் படம் வெளியான போது இதுபோன்ற துயர சம்பவங்கள் நடந்து இருக்கின்றன. அப்படி இருக்கும் போது இவரை மட்டும் ஏன் கைது செய்யப்பட்டார் என்று தெரியவில்லை. அல்லு அர்ஜுனை அரசியல் வளையத்திற்குள் கொண்டுவர பார்க்கிறார்கள். இந்த கைது நடவடிக்கையில் அந்த நடிகரின் தலையீடு நிச்சம் இருக்கும், அவரின் ஆசிர்வாதத்தோடு தான் இந்த கைது நடந்து இருக்கும் என்று பத்திரிக்கையாளர் சேகுவேரா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











