வெற்றிமாறனால் மட்டும்தான் அதை செய்ய முடியும்.. பத்திரிகையாளர் ஓபன் டாக்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே வெளியான முதல் பாகம் பெரும்பாலானவர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும்; ஒருதரப்பினரிடம் கலவையான விமர்சனம்தான் கிடைத்தது. எனவே இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை மிக தெளிவாக எடுத்திருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. ரசிகர்களுக்கும் இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்திய அளவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். முதல் படமான பொல்லாதவனை கமர்ஷியல் ஜானரில் உருவாக்கிய அவர் அடுத்தடுத்த படங்களில் வித்தியாசம் காண்பித்தார். முக்கியமாக ஆடுகளம் திரைப்படம் ஏகப்பட்ட தேசிய விருதுகளை அள்ளி வந்தது. அதேபோல் அவர் இயக்கிய அசுரன் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று தேசிய விருதை வாங்கியது. அவர் கடைசியாக விடுதலை படத்தை இயக்கினார். விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

விடுதலை 2: அந்தப் படத்துக்கு 90 சதவீதம் நல்ல ரெஸ்பான்ஸே கிடைத்தது. சூழல் இப்படி இருக்க அவர் தற்போது விடுதலை படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கியிருக்கிறார். இதில் கூடுதலாக மஞ்சு வாரியர், கிஷோர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படமானது டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் சேகுவேரா விடுதலை 2 குறித்தும், வெற்றிமாறன் குறித்தும் பேசியிருக்கிறார்.
சேகுவேரா பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் எனது கதை என்று ஒருவர் ஆரம்பித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுதான் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஒரு புரட்சியாளர் பற்றி ஒரு படம் எடுப்பது இங்கு சிரமமான ஒன்று. அப்படியே எடுத்தாலும் அது சாதிய வளையத்தில் சிக்கிவிடும். அப்படி இல்லையென்றால் ஃபாசிஸ்ட், மாவோயிஸ்ட் வட்டத்தில் சிக்கி கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றன.
சுதந்திரம் அவசியம்: ஒரு படைப்பாளிக்கு சுதந்திரம் என்பது மிக மிக அவசியம். ஒரு படம் ஓடுமா ஓடாதா என்பதையெல்லாம் தாண்டி அந்தப் படத்தில் பெரிய ஹீரோ யாராவது நடித்தால்தான் படத்தை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகும். அதனையடுத்து அந்தப் படத்தின் கதை பற்றிய பிரச்னை வரும். அதற்காக உரிமை கோரி பலரும் வருகிறார்கள். இந்தப் படம் தமிழ் தேசிய போராளில் புலவர் கலியபெருமாள் பற்றிய படம்தான். அதை வெற்றிமாறன் ஓபனாக சொல்லவில்லை என்றாலும் அதுதான் உண்மை.
எளிதானது இல்லை: வேறு எவருடைய வாழ்க்கையையும் படமாக எடுத்துவிடலாம். ஆனால் கலியபெருமாளின் வாழ்க்கை வரலாற்றை எடுப்பது அவ்வளவு ஒன்றும் எளிதில்லை. அவருடைய படத்தை ஒரு ஆண் மகனால் மட்டும்தான் எடுக்க முடியும். அதை வெற்றிமாறன் செய்திருக்கிறார். விடுதலை படக்குழு மொத்தமும் ஆம்பளைகளால் ஆனது. இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று தங்கம் என்பவர் கூறிவருகிறார். இவர் யார் என்பதே நமக்கு தெரியாது. அதேசமயம் வெற்றிமாறன் யார் அவர் எப்படிப்பட்ட படைப்பாளி என்பது அனைவருக்குமே தெரியும்" என்றார்.


Click it and Unblock the Notifications











