தவறான வழிநடத்தல்.. தலைக்கனத்தை மட்டும் ஏற்றிக்கொள்ளாதீர்கள்.. விஜய் சேதுபதி மகனுக்கு பிரபலம் அட்வைஸ்
சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். அவர் இப்போது ஃபீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஓரளவு ரெஸ்பான்ஸை பெற்றது. அதேசமயம் சூர்யா ரொம்பவே ஆட்டிட்யூட் காண்பிக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் சூர்யாவுக்கு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு அட்வைஸ் ஒன்றை செய்திருக்கிறார்.
விஜய் சேதுபதி இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து, பல அவமானங்களை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதைக்கு தேவை என்றால் எந்த ரோலாக இருந்தாலும் செய்யக்கூடியவர். அப்படி அவர் வில்லனாக பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

மகாராஜா: அதேசமயம் விஜய் சேதுபதி ஹீரோவாக தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அதன்படி தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார் அவர். குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. அடுத்ததாக அவர் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார்.
மகன் சூர்யா: விஜய் சேதுபதிக்கு சூர்யா என்ற மகன் இருக்கிறார். முதன்முறையாக அவர் நானும் ரௌடிதான் படத்தில் ஒரு சீனில் வந்து சென்றார். பிறகு சிந்துபாத் படத்தில் படம் முழுக்கவே நடித்தார். அதற்கு பிறகு படிப்பில் கவனம் செலுத்திய அவர், இப்போது ஹீரோவாக அறிமுகமாகிறார். சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் ஃபீனிக்ஸ் படம்தான் அவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது.

ட்ரோல் சூர்யா: இதற்கிடையே சூர்யா அதிகம் கிண்டல்கள், கேலிகள், விமர்சனங்களையும் சந்தித்தார். படத்தின் பூஜைக்கு விஜய் சேதுபதி ஏன் வரவில்லை என்று அப்போது கேட்டதற்கு, 'நான் வேற அப்பா வேற.. அதனால்தான் சூர்யா சேதுபதினு போடாம சூர்யானு' போட்ருக்காங்க என்றார். அந்தப் பேச்சை பார்த்த பலரும் வயதுக்கு மீறிய பேச்சு என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். சமீபத்தில் நடந்த டீசர் வெளியீட்டு விழாவுக்கு விஜய் சேதுபதி வந்திருந்தார். அப்போது ஏன் அப்பாவை அழைத்து வந்தீர்கள் என்று சூர்யாவிடம் கேட்டதற்கு, தந்தையர் தினத்துக்காக அழைத்து வந்தேன் என்று கூறி சமாளித்தார்.
செய்யாறு பாலு: இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு சூர்யா குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "இங்கு பல வாரிசு நடிகர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். பிரபுவை ஹீரோவாக்குவதற்கு சிவாஜி கணேசன்கூட பயந்தார். அப்பாவின் பெயரை பயன்படுத்தமாட்டேன் என்று விஜய் சேதுபதியின் மகன் சொல்கிறார். ஆனால் டீசர் வெளியீட்டு விழாவுக்கு அப்பாவை அழைத்து வந்தார். ஏன் என்று கேட்டால் தந்தையர் தினம் என்கிறார். அவரை யாரோ தவறாக வழிநடத்தி இப்படி பேசுங்கள் என்று சொல்லிக்கொடுத்து நிறுத்தியிருப்பார்கள் போல.
விஜய் சேதுபதியால்தான் எல்லாம்: ஃபீனிக்ஸ் படத்தில் வரலட்சுமி, தேவதர்ஷினி, சம்பத் என பெரிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அது எல்லாமே விஜய் சேதுபதி பையன் என்பதால்தான் நடந்தது. சாதாரண சூர்யாவாக இருந்திருந்தால் நடந்திருக்காது. அதர்வா, கௌதம் கார்த்திக்கிடம் எல்லாம் ஐந்து பத்திரிகை நிருபர்கள் பெயரை சொன்னால் தெரியாது. அதேசமயம் முந்தைய தலைமுறை நடிகர்கள் பத்திரிகையாளர்களிடம் அன்யோன்யமாக நடந்துகொண்டனர். எனவே சூர்யா தலைக்கனத்தை மட்டும் ஏற்றிக்கொள்ளாமல் இருந்தால் நீங்கள்தான் அடுத்த விஜய் சேதுபதி" என்றார்.


Click it and Unblock the Notifications











