Leo Audio Launch - லியோ ஆடியோ லான்ச் ரத்து.. அரசியல் அழுத்தம்தான் காரணம்.. பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: Leo Audio Launch (லியோ ஆடியோ லான்ச்) லியோ ஆடியோ லான்ச் ரத்தானது குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம்தான் நேற்றிலிருந்து ஹாட் டாபிக். அதற்கு காரணம் அந்தப் படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதுதான். லியோ ஆடியோ லான்ச்சுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. செப்டம்பர் 30ஆம் தேதி நடக்கும் என்று கூறப்பட்ட சூழலில் அதற்கான பாஸ்களும் தயாராகிவிட்டன. மேலும் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டதாக சில புகைப்படங்களும் வெளியாகின.

என்ன காரணம்?: ஆனால் லியோ படத்தின் ஆடியோ லான்ச் நடக்காது என்று தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்துவிட்டது. மேலும் நிறுவனம் அளித்த விளக்கத்தில், "ஆடியோ வெளியீட்டு விழாவுக்கான பாஸ் கோரிக்கைகள் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமின்றி பாதுகாப்பு கட்டுப்பாடுகளையும் கருத்தில் கொண்டு லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடிக்கடி படத்தின் அப்டேட்டுகளை வெளியிடுவோம். அதேபோல் பலர் நினைப்பது போல் இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு எதுவுமோ காரணம் இல்லை" என குறிப்பிட்டிருந்தது.
அதுவா காரணம்?: தயாரிப்பு நிறுவனம் மேற்கூறியபடி விளக்கமளித்திருந்தாலும் கண்டிப்பாக அது காரணமாக இருக்காது. ஏனெனில் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் நடந்த சூழலில் லியோவுக்கு மட்டும் ஏன் நடத்த முடியாது. கண்டிப்பாக இதற்கு பின்னால் அரசியலோ அல்லது வேறு ஏதோ காரணம் இருக்கிறது என்று விஜய் ரசிகர்கள் கூறினர்.
செய்யாறு பாலு பேட்டி: இந்நிலையில் சினிமாவின் மூத்த பத்திரிகையாளர் இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், "விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது உறுதியாகிவிட்டது. பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து அணிகளுக்குமான ஆலோசனை கூட்டம் முடிந்துவிட்டது. தளபதி 69ஐ முடித்துவிட்டு அவர் பிரேக் எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறார். இதுபோன்ற விஷயங்களை லியோ ஆடியோ லான்ச்சில் பேசவிருந்தார் என்பதுதான் உண்மை.
இன்னொரு விஜயகாந்த்: முழுக்க முழுக்க இன்னொரு விஜயகாந்த்தை அரசியலுக்குள் வந்துவிடக்கூடாது என்பதுதான் ஒட்டுமொத்த அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் விருப்பம். அந்த அழுத்தம்கூட இதற்கு இருக்கலாம். அதிக பாஸ் கேட்டதுதான் நிகழ்ச்சி ரத்துக்கு காரணம் என சொல்கிறார்கள். ஆனால் க்யூ ஆர் கோட் போன்ற வசதிகள் வந்துவிட்டன. அதையெல்லாம் வைத்து பாஸ் இருப்பவர்களை மட்டும் அனுப்பியிருக்கலாம். அதுவும் இல்லை என்றால் ஓடிபி வருவது போல் செட் செய்திருக்கலாம். இப்படி எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.
இதெல்லாம் காரணமா?: எனவே இதெல்லாம் ஒரு காரணமே இல்லை. நேற்று மாலை ஐந்து மணிவரை ஆடியோ லான்ச்சுக்கான நடைமுறைகள் போய்க்கொண்டிருக்கின்றன. மேலும் 10,000 போலி பாஸ்கள் விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பின்னால் கனமான ஒரு அரசியல் அழுத்தம் இருக்கிறது. விஜய்க்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே வருகிறார்கள். அதனால் தான் ஏன் அரசியல் கட்சி ஆரம்பிக்கக்கூடாது என்ற முடிவுக்கு அவர் வந்துவிட்டார். அந்த எதிர்கால அரசியலுக்கு இந்த லியோ ஆடியோ லான்ச்சை மாநாடு போல் பயன்படுத்த விஜய் திட்டமிட்டிருந்தார் என்பதுதான் உண்மை. அதற்கு முட்டுக்கட்டை போட்டாச்சு" என்றார்.


Click it and Unblock the Notifications











