Asin - ஜோதிகா தான் வேண்டும்.. அசினை அசால்ட்டாக ஒதுக்கிய சூர்யா.. செய்யாறு பாலு பகிர்ந்த சீக்ரெட்
சென்னை: Asin (அசின்) நடிகை அசினை சூர்யா ஒதுக்கிய சம்பவம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின் தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார். ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அந்தப் படத்தில் அசின் கதைப்படி கேரள பெண்ணாகவே நடித்து மலையாளம் கலந்த தமிழில் பேசி அசரடித்தார்.முக்கியமாக முதல் படத்திலேயே சொந்தக் குரலில் டப்பிங் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

டாப் நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் மலை போல் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார். இதன் காரணமாக கோலிவுட்டில் அசின் அலை பலமாகவே அடித்தது. முக்கியமாக அசினிடம் அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை அவரது நடிப்பு பலமாகவே உணர்த்தியது. .
கஜினி: பெரும்பாலும் ஒரு நடிகருக்குத்தான் தான் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது நடக்கும். ஆனால் நடிகைகளில் அரிதாக அசினுக்கு அது நடந்தது. விஜய்யுடன் நடித்த போக்கிரி, அஜித்துடன் நடித்த ஆழ்வார் ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸாகின. இதற்கிடையே அசினை செம ஃபெர்பார்மராக காட்டிய படம் என்றால் அது கஜினிதான். அதில் அவர் ஏற்றிருந்த கல்பனா கதாபாத்திரத்தை இன்றுவரை ரசிகர்கள் மறக்காமல் கொண்டாடி வருகின்றனர்.
பாலிவுட் டூ திருமணம்: தமிழில் செம பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த அசின் பாலிவுட் பக்கம் சென்று அங்கு அமீர் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு பீக்கில் சென்றார். ஆனால் தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோதே மைக்ரோமேக்ஸ் CEO ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
சில்லுனு ஒரு காதல்: இந்நிலையில் சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு அசின் குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் நடிப்பதற்கு அசினிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இயக்குநர் தரப்பு கதையை சொல்லி முடித்ததும் இதில் மொத்தம் இரண்டு ஹீரோயின்கள் என்று சொல்லிவிட்டு உங்களுக்கு ஐஷு (பூமிகா ஏற்றிருந்த கேரக்டர்) கேரக்டர் என்று கூறினார்கள்.
ஆனால் அசினோ எனக்கு பூமிகா கேரக்டர் வேண்டாம் குந்தவை (ஜோதிகா ஏற்றிருந்த கேரக்டர்) கேரக்டர்தான் வேண்டும் என்றார். அதற்கு படக்குழுவோ இல்லை அந்தக் கேரக்டரை ஜோதிகாதான் செய்ய வேண்டும் என்று சூர்யா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் என்றார்கள். அசின் அதற்கு ஒத்துக்கொள்ளாமல் குந்தவை கேரக்டர் இருந்தால் நான் செய்கிறேன் இல்லை என்றால் வேண்டாம் என கூறிவிட்டார். ஆனால் அந்தக் கேரக்டருக்கு ஜோதிகாதான் என்பதில் சூர்யா திடகாத்திரமாக நின்றதால் அசினை அந்தப் படத்தில் நடிக்க வைக்கவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











