Vettaiyan - ஜெய்பீம் மாதிரி இருக்கக்கூடாதுனு கண்டிஷன் போட்டாரா ரஜினி?.. வேட்டையன் சீக்ரெட் சொன்ன செய்யாறு பாலு
சென்னை: Vettaiyan (வேட்டையன்) வேட்டையன் படத்தின் டைட்டில் டீசர் வெளியான சூழலில் அதுகுறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து அதே உற்சாகத்துடன் தற்போது ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். ஞானவேல் அடிப்படையில் பத்திரிகையாளர் என்பதாலும், முதல் படத்திலேயே மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தவர் என்பதாலும் ரஜினியை வைத்து எந்த மாதிரியான கதைக்களத்தை தொட்டிருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் பூஜை போடப்பட்டு தொடங்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் போலி என்கவுன்ட்டருக்கு எதிராக களமாடுபவராக நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இதில் அவர் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் ஜெய்பீம் போலவே இந்தப் படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
நட்சத்திர பட்டாளம்: படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஃபகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகவும்; அமிதாப் பச்சன் மூத்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.
வேட்டையன்: இப்படத்துக்கு தலைவர் 170 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ரஜினியின் 74ஆவது பிறந்தநாளையொட்டி நேற்று முன் தினம் படத்தின் பெயர் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில் ரஜினிகாந்த் கையில் லத்தியுடன் வருகிறார். மேலும் குறி வெச்சா இர விழணும் என்று அவர் பேசும் பஞ்ச் டயலாக்கிற்கும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
செய்யாறு பாலு பேட்டி: அதேசமயம் டைட்டில் டீசரை பார்த்த ரசிகர்களில் ஒரு தரப்பினர் ஞானவேலுவும் இந்தப் படத்தின் மூலம் கமர்ஷியல் பாதையில் சென்றுவிட்டாரோ என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர். இந்நிலையில் வேட்டையன் குறித்து சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசுகையில், "ஜெய் பீம் படத்தில் நடந்த சர்ச்சைகள் அனைவருக்குமே தெரியும். குறிப்பிட்ட சமூகத்தை விமர்சனம் செய்து வைக்கப்பட்ட காலண்டர் பிறகு மஹாலட்சுமி காலண்டராக மாறியது.
ஜெய் பீம் பற்றி இன்னமும் ஒரு விவாதம் இருக்கிறது. இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே ஞானவேலுவிடம் ரஜினி ஒன்றை சொல்லிவிட்டார். அதாவது, இதில் சமூக அரசியல் பேசுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் சாதிய அடையாளமோ, தனிமனித தாக்குதலோ இதில் இருக்கக்கூடாது. நீங்கள் கருத்தை சொல்லுங்கள் ஆனால் முழுக்க முழுக்க எனக்கான படமாக இருக்க வேண்டும் என்பதை தெளிவான கண்டிஷனாக போட்டுவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications