வைரமுத்துவை இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை.. ஆனால் ஒன்று நடந்தது..பத்திரிகையாளர் ஓபன் டாக்
சென்னை: தமிழ் சினிமா பாடல்களில் தவிர்க்கவே முடியாதவர் வைரமுத்து. இதுவரை 7000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கும் அவர் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 7 தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். இளைய பாடலாசிரியர்களுக்கு போட்டியாக இப்போதும் திகழ்ந்துகொண்டிருக்கிறார் வைரமுத்து. இந்தச் சூழலில் பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் இளையராஜா - வைரமுத்து குறித்து பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், பாடலுக்கு இசை முக்கியமா இல்லை மொழி முக்கியமா என்று வைரமுத்து பேசியதிலிருந்து மீண்டும் லைம் லைட்டுக்கு வந்திருக்கிறார் அவர். வைரமுத்துவின் பேச்சை பார்த்த கங்கை அமரன் பொங்கி எழ, இளையராஜா மொரிஷியலில் ஓய்வு எடுக்க, வைரமுத்து அமைதி காக்க என இந்த விவகாரம் இருக்கிறது. இந்தச் சூழலில் இளையராஜா - வைரமுத்து அறிமுகம் குறித்து பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

ராஜகம்பீரன் பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "வைரமுத்து தன் மனைவி பொன்மணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். வைரமுத்துவைவிட அவரது மனைவிக்கு ஒரு வயது அதிகம். இவர்களது திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்ததால் கடுமையான போராட்ட வாழ்க்கையைத்தான் இருவருமே வாழ்ந்தார்கள். ஆனால் அவர்களுக்குள்ளான காதல் எதுவும் குறையவில்லை. நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பு வேலை செய்துகொண்டிருந்தார் வைரமுத்து. ஆரம்பத்தில் சினிமாவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இல்லை.
முடிந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்: இருந்தாலும் எப்படியோ அவருக்கு சினிமா பற்றிய எண்ணம் வந்துவிட தான் எழுதிய திருத்தி எழுதிய தீர்ப்புகள், வைகறை மேகங்கள் உள்ளிட்ட கவிதை தொகுப்புகளை பாரதிராஜாவிடம் கொடுத்து; முடிந்தால் என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வந்துவிட்டார். பாரதிராஜா இலங்கைக்கு செல்லும்போது விமானத்தில் வைத்து வைரமுத்துவின் கவிதைகளை படித்தார். அது அவருக்கு ரொம்பவே பிடித்துப்போனது.
அறிமுகம்: அதுமட்டுமின்றி அதில் தேனி வாசம் அடித்ததால்; இவர் நம்மூர்க்காரர் என்பதையும் பாரதிராஜா புரிந்துகொண்டார். இந்தியாவுக்கு திரும்பிய பிறகு இளையராஜாவிடம் வைரமுத்துவை பாரதிராஜா அழைத்து சென்றார். ஆனால் வைரமுத்து எழுதுவதில் இளையராஜாவுக்கு பெரிதாக விருப்பமே இல்லை. இருப்பினும் பாரதிராஜாவுக்காக ஒத்துக்கொண்டார். முக்கியமாக வைரமுத்துக்கு எதை எழுதினாலும் நன்றாக இல்லை என்று சொல்லலாம் என்ற முடிவில் இருந்தார் இளையராஜா.
காதல்: ஆனால் வைரமுத்து எழுதிய, 'பொன்மாலை பொழுது' பாடல் இளையராஜாவுக்கு பிடித்துவிட்டது. அதுமட்டுமின்றி இவர் பெரிய திறமைசாலி என்பதையும் புரிந்துகொண்டார். இதற்கு பிறகு அவர் மீது இளையராஜாவுக்கு காதலே வந்துவிட்டது. பின், எந்தத் தயாரிப்பாளர் வந்தாலும் பாடல்களை எழுதுவதற்கு வைரமுத்துவை பரிந்துரைத்தார் இளையாரா" என்றார். வைரமுத்துவும், இளையராஜாவும் சேர்ந்து நிழல்கள், முதல் மரியாதை, மண்வாசனை, அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள், சிந்துபைரவி உள்ளிட்ட படங்களில் பணியாற்றியிருக்கின்றனர். அந்தப் படங்களில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இன்றுவரை க்ளாசிக்காக ஒலித்துக்கொண்டிருப்பவை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரச்னை: ஆனால் இடையில் சில காரணங்களால் இரண்டு பேருமே பிரிந்துவிட்டார்கள். தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து இரண்டு பேருமே இதுவரை வெளிப்படையாக சொன்னதில்லை. அதேசமயம் அவர்கள் இரண்டு பேரையும் மீண்டும் சேர்த்துவைக்க பாரதிராஜா உள்ளிட்டோர் முயன்றும் அது நிறைவேறாமல் போனது. இன்றும் அவர்கள் இணைய வேண்டும் என்பதுதான் இசை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











