ஜூனியர் என்டிஆருக்குக் கல்யாணம் - அதிர்ச்சியில் ரசிகை விஷம் குடித்தார்
நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு அவரது உறவுக்காரப் பெண்ணை பேசி முடித்து விட்ட தகவலால் அதிர்ச்சி அடைந்த ரசிகை ஒருவர் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளார்.
கடப்பா மாவட்டம் பொதட்டூரை சேர்ந்த ரசிகை அஞ்சனாதேவி கடந்த சில மாதங்களாக தனது தோழிகளிடம் ஜூனியர் என்.டி.ஆரைத் தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்துள்ளார்.
தற்போது அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் என செய்தி வெளியானதும் கவலையில் விஷம் குடித்து விட்டார்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அஞ்சனாதேவியை பெற்றோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் அஞ்சனாதேவி.
இதற்கிடையே, ஜூனியர் என்டிஆருக்கு மைனர் பெண்ணைக் கட்டி வைக்கப் போகிறார்கள் என்று கூறி வழக்குப் போடப்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் பேரனும், தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகருமான ஜூனியர் என்.டி.ஆருக்கு திருமணம் செய்து வைக்க அவரது தந்தை அரிகிருஷ்ணா முடிவு செய்தார்.
தனியார் தொலைக்காட்சி சேனல் அதிபர் நார்னே சீனிவாஸின் மகள் லட்சுமி பிரணதியை (17) திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்தன. மணமகள் பிரணதி முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உறவினர் ஆவார். சீனிவாஸின் மனைவி சந்திரபாபுநாயுடுவின் வளர்ப்பு மகள் என்பதால் பிரணதி, நாயுடுவுக்குப் பேத்தி முறை ஆவார்.
இதனால் சந்திரபாபு நாயுடு வீட்டில் அரிகிருஷ்ணா- நார்னே சீனிவாஸ் இருவரும் சந்தித்து மே மாதம் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இந்நிலையில் மசூலிப்பட்டிணத்தை சேர்ந்த வக்கீல் சிங்களூர் காந்தி பிரசாத் கிருஷ்ணா மாவட்ட நீதிமன்றத்தில், ஜூனியர் என்.டி.ஆர் மைனர் பெண்ணை மணப்பதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மைனர் பெண்ணுடன் ஜூனியர் என்.டி.ஆருக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற சந்திரபாபுநாயுடு, அரிகிருஷ்ணா, நார்னே சீனிவாசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து சந்திரபாபு நாயுடு கோர்ட்டுக்கு ஒரு உத்தரவாதம் அளித்தார். அதில், மணமகள் பிரணதிக்கு 18வயது பூர்த்தி அடைந்த பின்னர்தான் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஹைதராபாத்தில் உள்ள இண்டர்மீடியேட் கல்லூரியில் படித்துவரும் பிரணதிக்கு வரும் மே மாதத்தில் 18 வயது நிறைவாகிவிடும் என்றும் அதன் பிறகு சிக்கலின்றி திருமணம் நடக்கும் என்றும் பிரணதியின் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











